நடிகர் யோகி பாபு அதிக சம்பளம் கேட்கிறார், கால் ஷீட் கொடுத்துவிட்டு படத்திற்கு நடிக்க வருவதில்லை. அவர் நடித்த படத்திற்கே புரோமோஷன் நிகழ்ச்சிக்கு வர பணம் கேட்கிறார். புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டு உள்ளது.
சமீபத்தில் யோகி பாபு, வேதிகா, இனிகோ பிரபாகர் நடித்துள்ள ‘கஜானா’ படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தயாரிப்பாளர் ராஜா, “இந்தப் படத்தில் நடித்த நடிகர் யோகி பாபு இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு வரவில்லை. 7 லட்சம் கொடுத்திருந்தால் வந்திருப்பார்” என்று ஆவேசமாக பேசியிருந்தார்.
இந்த நிலையில், யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் ஜோரா கையைத் தட்டுங்க படம் வரும் 16ஆம் தேதி ரிலீஸ் ஆக்றது. இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் யோகி பாஹப கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் முதலில் பேசிய தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், யோகி பாபு குறித்து அவதூறு கருத்களை பரப்புகின்றனர். ஒரு நடிகர் அந்த படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில், ஒரு நாளோ இரண்டு நாளோ நடித்துள்ளார் என்றால் புரோமோஷனுக்கு அழைப்பது தவறானது. ஒரு படத்தில் யோகி பாபு 15 நாட்கள், 20 நாட்கள் நடித்துள்ளார் என்றால் அந்த படத்தின் புரோமோஷனுக்கு அவரை அழைப்பது சரியானது, யோகி பாபுவும் புரோமோஷனுக்காக வருவார்.
ஜோரா கைய தட்டுங்க படத்தின் கதாநாயகனாக யோகி பாபு நடித்துள்ளார். அதனால், இந்த படத்தின் புரோமோஷனுக்கு வந்திருக்கிறார் .யோகி பாபு காமெடியனாக நடிக்கும் படங்களில் அதிக சம்பளம் வாங்கிக் கொண்டு, கதாநாயகனாக நடிக்கும் படத்தில் சம்பளத்தை குறைத்துக்கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் எஸ்.ஜே. சூர்யாவை அனைவரும் பின்பற்ற வேண்டும். அவர் வில்லனாக நடிக்க கூப்பிட்டால் நான் சொல்வதுதான் சம்பளம், கதாநாயகனாக நடிக்க கூப்பிட்டால் நீங்கள் கொடுப்பதை நான் வாங்கிக் கொள்கிறேன் என்று கூறி கொள்வார்.
இவரைத் தொடர்ந்து பேசிய யோகி பாபு, ” தனஞ்ஜெயன் சார், நான் சம்பளத்தை எப்போது முடிவு செய்வது இல்லை படக்குழுவினர்தான் எனது சம்பளத்தை முடிவு செய்கிறார்கள். நான் சம்பளத்தைக் சொன்னாலே, என்னை வில்லனாக பார்க்கிறார்கள். நீங்களே கதை கேளுங்கள், நீங்களே சம்பளத்தை முடிவு செய்யுங்கள், நீங்கள் பேசிய சம்பளத்தை முழுவதுமாக பெற்றுக் கொடுத்து விடுங்கள்.
நான் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கும் படங்களின் புரோமோஷனுக்கு நான் எப்படி வர முடியும்? நான் அனைவருக்கும் ஒத்துழைக்கும் மனப்பான்மையில் தான் இருக்கிறேன். எனக்கு சம்பள பாக்கி எவ்வளவு இருக்கிறது தெரியுமா? அந்த பட்டியலை நான் வெளியிட்டால் பணத்தை பெற்றுக் கொடுத்து விடுவீர்களா? அதனால் உண்மை என்று தெரியாமல் பேச வேண்டாம். மனதிற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது . என்னிடம் ஆசிஸ்டன்ட் ஆக வேலை செய்த தம்பி ஒருவர் ஹீரோவாக படம் நடிப்பதாக கூறினார். அவருக்காக இரண்டு நாள்தான் நடித்திருந்தேன். அந்த பட புரமோஷன் நிகழ்ச்சிக்கு அழைப்பது எந்த விதத்தில் நியாயம்? என்று எமோஷனலாக கேட்டார்.