பாஜக ஆளும் மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் பட்டப்பகலில் கல்லூரி மாணவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து 225 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜலான் மாவட்டத்தில் ராம் லகான் படேல் பட்டயக் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு 21 வயதான மாணவி ரோஷினி அஹிர்வார் இளங்கலை படித்து வந்துள்ளார். இன்று காலை தனது கல்லூரியில் தேர்வெழுதிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த ரோஷினியை கல்லூரி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சுற்று வளைத்துள்ளனர்.
அதில் ஒருவர் துப்பாக்கியால் தலையில் சுட்டதில் ரோஷினி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மரணமடைந்தார். கல்லூரி மாணவி பட்டப்பகலில் துப்பாக்கியால் சுடப்பட்டு, சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது.
இதுதொடர்பாக பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் ராஜ் அஹிர்வார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ரோஷினி திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரமடைந்த நபர் அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மற்றொரு குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.