உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கிகள்… வனதுறையிடம் ஒப்படைப்பு…!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வன கோட்டத்திற்கு உட்பட்ட ராயக்கோட்டை, ஓசூர், கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி, அஞ்செட்டி, உரிகம் ஆகிய 7 வனச்சரகங்களை ஒட்டியுள்ள வனப் பகுதியில் யானைகள் மற்றும் வனவிலங்குகள் வேட்டையாடுவது தடுக்கும் வகையில் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து ஜூலை 17 ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி அறிவித்திருந்தார்.
இதையடுத்து, அஞ்செட்டி வனச்சரகத்தில் 21, உரிகம் வனச்சரகத்தில் 20, தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் 36, ஜவளகிரி வனச்சரகத்தில் 17, ஓசூர் வனச்சரகத்தில் 5 மற்றும் கிருஷ்ணகிரி வனச்சரகத்தில் 29 என மொத்தம் 128 உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகள் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அவ்வாறு ஒப்படைத்த நாட்டு துப்பாக்கிகளை மாவட்ட ஆட்சியர் திருமதி சரயு முன்னிலையில் ஓசூர் டிஎஸ்பி பாபு பிரசாந்த் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிகழ்வின் பொழுது ஓசூர் சார் ஆட்சியர் திருமதி பிரியங்கா மற்றும் காவல்துறை வனத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-பவானி கார்த்திக்