யுவஜன ஸ்ராமிகா ரைத்து தெலுங்கானா கட்சி (YSRTP) தலைவரும், ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையுமான ஒய்.எஸ்.ஷர்மிளா பெண் காவலரின் கன்னத்தில் அறைந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானதோடு, பெரும் சர்ச்சையையும் உருவாக்கியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 12ம் தேதி அன்று, தெலுங்கானா மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் முறைகேடு நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. குரூப் 1 முதல்நிலை தேர்வு, உதவி பொறியாளர்கள், AEE மற்றும் DAO தேர்வுகளை ரத்து செய்தது தவிர குற்றம் சாட்டப்பட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
வினாத்தாள் கசிவு வழக்கு தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்த அலுவலகத்திற்கு ஒய்.எஸ்.ஷர்மிளா செல்ல முயன்றதாக காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து போலீசார் அங்கு சென்றனர்.
இதுதொடர்பாக சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் வீடியோவில், வீட்டில் இருந்து காரில் புறப்பட்ட ஒய்.எஸ்.ஷர்மிளாவை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் கோபமடைந்த ஒய்.எஸ்.ஷர்மிளா காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அவரை நோக்கி வந்த பெண் காவலரையும் பளார் என கன்னத்தில் அறைந்தார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது.
எந்தவித அனுமதியும் பெறாமல் ஒய்.எஸ்.ஷர்மிளா போராட்டம் நடத்த எஸ்ஐடி அலுவலகத்திற்கு புறப்பட்டுச் சென்றதாகவும், அவரிடம் முறையான விளக்கம் பெற சென்றதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் பெண் கான்ஸ்டபிளை கன்னத்தில் அறைந்தது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஒய்.எஸ்.ஷர்மிளா வீடியோ குறித்து விளக்கம் அளித்துள்ள அறிக்கையில், தன்னிடம் காவல்துறையினர் அநாகரீகமாக நடந்து கொண்டதாகவும், தற்காப்பிற்காகவே அப்படி நடந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
#WATCH | Telangana Police detains YSRTP Chief YS Sharmila and shifts her to the local police station. She was detained after police officials received information about her visiting SIT office over the TSPSC question paper leak case pic.twitter.com/n6VaYgRarx
— ANI (@ANI) April 24, 2023