தாயின் கண் முன்னே ஒன்றரை வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்..!
நாமக்கல் மாவட்டம் வெப்படை அடுத்த சவுதாபுரம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் மணிகண்டன்-அபிநயா. இவர்களுக்கு 4 வயதில் விசாகன் என்ற மகனும் ஒன்றரை வயதில் வெற்றிவேல் என்ற மகனும் உள்ளனர்.
இந்தநிலையில் விசாகன் வெப்படை அடுத்த உப்புபாளையம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில் யுகேஜி பயின்று வருகிறார். விசாகன் தினமும் பள்ளிக்கு., பள்ளி வாகனத்தில் சென்று வருவது வழக்கம்.
அதன்படி சம்பவ நாளான இன்று காலை பள்ளிக்கு புறப்பட்ட விசாகனை பள்ளிக்கு அனுப்புவதற்காக அவரது தாய் அபிநயா வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்து இருந்ததாக கூறப்படுகிறது.
விசாகனை பேருந்தில் ஏற்றுவதற்காக அபிநயா சென்ற போது வீட்டில் இருந்த ஒன்றரை வயது குழந்தை வெற்றிவேல், தவழ்ந்தபடி பள்ளி வாகனத்தின் பின்பக்க சக்கரத்தின் அருகே சென்றதாக கூறப்படுகிறது.
இதை வாகன ஓட்டுநரும் அங்கிருந்தவர்களும் கவனிக்காத நிலையில், பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை இயக்கி உள்ளார். அப்போது சக்கரத்தின் கீழே இருந்த குழந்தை வெற்றிவேல் மீது பேருந்து ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்துள்ளார்.
பின்னர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெப்படை போலீசார், குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தனியார் பள்ளியின் பேருந்து ஓட்டுநர் செல்வராஜ் (50) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாயின் கண் முன்னே குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்