செல்போன் பேசிய வடமாநிலத்தவருக்கு நேர்ந்த சோகம்..! பரபரப்பான திருப்பூர்..!
மூன்று மாடி கட்டிடத்தில் இருந்து செல்போன் பேசிக்கொண்டே கீழே விழுந்த வட மாநில இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்..
திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் ஈரோட்டைச் சேர்ந்த உலகநாதன் என்பவருக்கு சொந்தமான மூன்றடுக்கு மாடி கட்டிடம் உள்ளது இந்த கட்டிடத்தை பனியன் நிறுவனம் மற்றும் வீடுகளாக பிரித்து வாடகைக்கு விட்டுள்ளார். இந்த கட்டிடத்தில் மூன்றாவது மாடியில் 50க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கி பல்வேறு பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று உணவு சமைத்து வைத்து விட்டு பீகாரைச் சேர்ந்த சிவ்குமார் மற்றும் அவரது உறவினர் ராஜ்குமார் என்ற இருவரும் மூன்றாவது மாடியில் படி அருகே அமர்ந்து தங்களது உறவினர்களிடம் போனில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது எழுந்து அறைக்குச் செல்ல முயன்ற சிவகுமார் தடுமாறி கீழே விழுந்துள்ளார். அவரைக் காப்பாற்ற முயன்ற ராஜ்குமாரும் தவறி கீழே விழுந்தார்.

இதில் சிவக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ராஜ்குமாரும் பலத்த காயமடைந்து திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திருமுருகன் பூண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.