தங்கத்தோடு போட்டியிடும் தக்காளி..!! நீயா நானா..!!
கோயம்பேடு காய்கறி சந்தையில் நாள் ஒன்றுக்கு 1100 டன் தக்காளி தேவை உள்ள நிலையில்.., இன்று எப்பொழுதும் இல்லாத அளவிற்கு 700 டன் வரத்து குறைந்து 400 டன் அளவிற்கு மட்டுமே வந்துள்ளது. எனவே இன்று ஒரு கிலோ தக்காளியின் விலை கோயம்பேடு மார்க்கெட்டின் கிலோ 130 ரூபாய்க்கு.., கடைகளில் ஒரு கிலோ தக்காளியின் விலை 150 ரூபாய்க்கும் சென்னை புறநகரில் 160 முதல் 180 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தக்காளி விளைச்சல் அனைத்து மாநிலங்களிலும் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில்.., தட்டுபாடு காரணமாக வட மாநிலங்களில் கிலோ 230 ரூபாய் முதல் 260 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆந்திராவில் தக்காளியின் விளைச்சல் ஓரளவிற்கு இருப்பதால் பல்வேறு வடமாநிலங்களில் இருந்தும் வடமாநில வியாபாரிகள் ஆந்திராவில் இருந்து அவரவர் மாநிலங்களுக்கு கொள்முதல் செய்ய துவங்கியுள்ளனர். எனவே ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய தக்காளி வட மாநிலங்களுக்கு சென்று கொண்டிருப்பதால், தமிழ்நாட்டில் தக்காளியின் விலை தங்கம் அளவிற்கு கிடு கிடுவென உயர்ந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தக்காளியின் விலை கிலோ 100 ரூபாய்க்கு விற்று வந்த நிலையில், கூட்டுறவு துறைகளில் ஒரு கிலோ தக்காளியின் விலை கிலோ 60 ரூபாய்க்கும் ஒரு சில இடங்களில் 90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.