சென்னையில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு சிறப்பு நிதியாக ரூ.6 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா ஊரடங்கு காரணமாக, 20.04.2021 முதல் மறு அறிவிப்பு வரும் வரை பொதுமக்களுக்காக, அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மூடப்பட்டது என முதன்மை தலைமை வனப் பாதுகாவலரும், தலைமை வனவிலங்கு காப்பாளரும் தெரிவித்தனர்.
2021-2022 நிதியாண்டில் ஏப்ரல் முதல் மறு அறிவிப்பு வரை அனைத்து விலங்கியல் பூங்காக்களும் மூடப்பட்டிருப்பதால், உயிரியல் பூங்காக்களின் வருவாய் கணிசமாகக் குறைந்துள்ளது. பெறப்பட்ட வருவாயின் பெரும்பகுதி நடப்புக் கணக்கிலிருந்து அந்த ஆண்டின் வருடாந்திர செலவினங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது.
கடந்தாண்டு மார்ச் 31 நிலவரப்படி தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையத்தில் உள்ள மொத்தத் தொகை ரூ.6,02,58,474 என்று முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வனவிலங்கு காப்பாளர் தெரிவித்துள்ளார்.
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் வழக்கமான மற்றும் அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு குறைந்தபட்ச மாதச் செலவு ரூ.128 லட்சம் ஆகும். தேவையான நிதி கிடைக்காத பட்சத்தில், மிருகக்காட்சிசாலையில் உள்ள காடுகளை நிர்வகித்தல் மற்றும் நிறுவனத்தை செயல்படுத்துவதில் மிருகக்காட்சிசாலை கடுமையான சிக்கலை சந்திக்க நேரிடும்.
எனவே, இந்த சிறப்பு நிதியை தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையத்தின் கணக்கில் டெபாசிட் செய்யும் வகையில், உயிரியல் பூங்காவை முறையாகச் செயல்படுத்த, அத்தியாவசியப் பொருட்களைச் சமர்ப்பிப்பதற்கான செலவினங்களுக்காக, 7 கோடி ரூபாயை உடனடியாக வழங்குமாறு, முதன்மை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசு இதனை பரிசீலித்த பிறகு, 2021-22 ஆம் ஆண்டில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு உணவுக் கட்டணம் மற்றும் இதர அத்தியாவசிய செலவுகள் போன்றவற்றிற்காக வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு சிறப்பு நிதியாக ரூ.6 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
Discussion about this post