அமெரிக்காவில் உள்ள தமிழக சிலைகள் மீட்க தனி குழு அமைக்க கோரிய வழக்கு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள தமிழக சிலைகளை மீட்க கோரி சென்னையை சேர்ந்த யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில்,அவர் கடந்த 2019 ஆம் ஆண்டு அமெரிக்க சென்ற போது வாஷிங்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த செம்பியன் மாதேவி, திருஞானசம்பந்தர், கால பைரவர் உள்ளிட்ட பல்வேறு புராதண சிலைகள் அங்கு இருந்தாக கூறியுள்ளார்.
இந்தியாவில் இருந்து திருடப்பட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அந்த அருங்காட்சியகத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிலை திருடப்பட்டுள்ளதால், இது சம்பந்தமாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி சிலைகளை மீட்க, இணை இயக்குனர் அந்தஸ்துக்கு குறையாத ஒரு அதிகாரியின் தலைமையில் குழு அமைக்க வேண்டும் என யானை ராஜேந்திரன் தனது மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து இதே மனுதாரர் தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சி.பி.ஐ.க்கு மாற்றி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததோடு சிறப்பு அதிகாரியை நியமித்து சிலை கடத்தல் வழக்குகளை உத்தரவிட்டார். அந்த தீர்ப்பை உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.
இந்த விவரங்களை மனுதாரர் தனது மனுவில் குறிப்பிடாமல் மறைத்துள்ளார் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். அதுமட்டுமின்றி உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிலை கடத்தல் சம்பந்தமான வழக்குகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் விசாரணை செய்து வருகின்றனர் என்றும் கூறினார்.
இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஏற்கனவே சிலை கடத்தல் வழக்குகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் விசாரித்து வருவதால், இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை எனக் கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.