தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் டூ தேர்வுகள் கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 3-ம் தேதிவரை நடைபெற்றன. இதில், 8 லட்சத்து 51 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். இதில் 4,21,013 மாணவியர்களும், 3,82,371 மாணவர்களும் தேர்வெழுதினர்.
விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்த நிலையில், தேர்வு முடிவுகளை சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
மாணவர்களை ஓவர் டேக் செய்த மாணவிகள்:
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தமாக 94.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற 7 லட்சத்து 55 லட்சத்து 451 பேரில் 4 லட்சத்து 05 ஆயிரத்து 753 மாணவிகளும், 3 லட்சத்து 49 ஆயிரத்து 679 மாணவர்களும் அடங்குவர். தேர்ச்சி விகிதத்தைப் பொறுத்தவரை வழக்கத்தை போலவே மாணவர்களை விட மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவியர் 4.93% அதிகம் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
தேர்வில் பங்கேற்ற மூன்றாம் பாலினத்தவர் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த மே-2022ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்வில் தேர்வெழுதிய மாணக்கர் 8 லட்சத்து 06 ஆயிரத்து 277 பேரில், 7 லட்சத்து 55 ஆயிரத்து 998 பேர் தேர்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
முதலிடம் பிடித்த மாவட்டங்கள்:
12ம் வகுப்பில் பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் 97.85 சதவீதத்துடன் முதலிடமும், 97.79 சதவீதத்துடன் திருப்பூர் 2ம் இடத்திலும், 97.59 சதவீதத்துடன் பெரம்பலூர் 3ம் இடத்திலும் உள்ளது.