தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே மின் வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து மூன்று காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, இனி சட்ட விரோதமாக மின் வேலி அமைத்து வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் குற்றத்தில் ஈடுபடுவது தெரியவந்தால் கடு்ம் நடவடிக்கை பாயும் என மாவட்ட ஆட்சியர் சாந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 7ம் தேதி, தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே காளிகவுண்டன் கொட்டாய் கிராமத்தில் விவசாய தோட்டத்தை சுற்றி வைத்த மின் வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்ததில் மூன்று காட்டு யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன. பாலக்கோடு வனத்துறையினர் நடத்திய விசாரணையில், முருகேசன் என்ற விவசாயி இரவு நேரத்தில் யானை மற்றும் காட்டுப்பன்றி தொல்லை காரணமாக தனது விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக மின்சார வேலி அமைத்துள்ளார். இதற்காக நேரடியாக மின் கம்பத்தில் இருந்து திருட்டு மின்சாரமும் எடுத்துள்ளார்.
இந்த மின்வேலியில் சிக்கி 40 வயது மதிக்கத்தக்க 2 பெண் யானை, ஒரு மக்னா யானை என மூன்று காட்டு யானைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. அதிர்ஷ்டவசமாக இரண்டு குட்டி யானைகள் உயிர் தப்பியன. இதனையடுத்து விவசாயி முருகேசன் கைது செய்யப்பட்ட நிலையில், மின்வேலி அமைப்பது தொடர்பாக தருமபுரி ஆட்சியர் பரபரப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.
வனவிலங்களை வேட்டையாடுவதோ, வனவிலங்களுக்கு குந்தகம் ஏற்படும் வகையிலான குற்றங்கள் செய்பவர்கள் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972 கீழ் அதிக பட்சம் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையோ, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கைக்கோ வழிவகை செய்யப்படும் என தருமபுரி ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.
வனவிலங்குள் குறித்த குற்றச்சம்பவங்கள் ஈடுபடுவது தெரிய வந்தால் 1800 425 4586 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு பொது மக்கள் புகார் தெரிவிக்கலாம் எனவும் அறிவித்துள்ளார்.