விசாரணைக்கு தடையில்லை..! கேசவ விநாயகம் வழக்கில் நீதிபதி அளித்த தீர்ப்பு..?
நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் நடைபெற்ற போது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்ட போது, சுமார் 4 கோடி ரூபாய் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் தேர்தல் பிரச்சாரத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக ஒரு தகவல் வெளியானது. அது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
அதனை தொடர்ந்து காவல்துறையினர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் விசாரணைக்கு ஆஜராகாமல் நயினார் நாகேந்தரின் கால அவகாசம் கேட்டிருந்தார்.
அதன் பின் பாஜக மூத்த நிர்வாகியான சேகரின் வீட்டிற்கும் காவல்துறையினர் நேரில் சென்று விசாரணை செய்துள்ளனர். இந்தநிலையில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் தொடர்பாக தமிழக பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்தை விசாரணை செய்ய காவல்துறையினர் முடிவு செய்தனர்.
அதற்கு அவர் ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டது. இந்த சம்மனுக்கு எதிராக பா.ஜ. க அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த அந்த மனுவில், பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என கேசவ விநாயகம் கூறி இருந்தார்.
தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் பெயருக்கும், எனக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமாக காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளதாக அவர் கூறியிருந்தார். மேலும் மனு மீதான விசாரணை இன்று நீதிபதி சரவணன் முன்பு வந்தது.
அப்போது, கேசவ விநாயகத்தை விசாரிக்க தடையில்லை என தெரிவித்த நீதிபதி, இடைக்கால நிவாரணம் வழங்க முடியாது என அவர் கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணையை கடந்த ஜூன் 3ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
– லோகேஸ்வரி.வெ