சிறுமி ஆர்த்தியின் குடும்பத்திற்கு 20 லட்சம் நிவாரணம்…
புதுச்சேரியில் கொலை செய்யப்பட்ட சிறுமி ஆர்த்தியின் குடும்பத்திற்கு 20 லட்சம் நிவாரணமாக வழங்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி, முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியை சேர்ந்த நாராயணன் – மைதிலி தம்பதியின் இரண்டாவது மகள் ஆர்த்தி அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த மார்ச் 2-ம் தேதி பிற்பகல் வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த நிலையில் சிறுமி திடீரென மாயமானார்.
இது குறித்து முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தனர்.
இதனிடையே, சிறுமியை விரைந்து மீட்கக்கோரி குடும்பத்தினரும், உறவினர்களும் முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சோலை நகர் பகுதியில் அம்பேத்கர் வீதி, கண்ணதாசன் வீதி இடையே செல்லும் கழிவுநீர் கால்வாயில் சாக்கு மூட்டை மிதப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
காவல்துறையினர் விரைந்து சென்று பார்த்தபோது, சிறுமியின் கை, கால்கள் கட்டப்பட்டு வேட்டி துணியால் சுற்றி கால்வாயில் வீசப்பட்டிருந்தது தெரியவந்தது.
காவல்துறையினர் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் சிறுமி கொலை செய்து கால்வாயில் வீசப்பட்டிருப்பது தெரியவந்தது.
சந்தேகத்தின்பேரில் காவல்துறையினர் ஒரு முதியவர் உட்பட 4 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.
அப்போது, சிறுமியை கொலை செய்த 19 வயது கருணாஸ் என்ற இளைஞர் மற்றும் 57 வயது விவேகானந்தன் என்ற முதியவர் ஒப்புக் கொண்டதாக தெரிவித்தனர்.
இதனிடையே சிறுமிக்கு நீதி கேட்டு புதுச்சேரி முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது.
வழக்கில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வலியுறுத்தியும், குற்றவாளிகளை உடனடியாக தூக்கிலிட வலியுறுத்தியும், பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களுக்கு கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு புதுச்சேரி அரசு சார்பில் ரூபாய் 20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை கிடைக்க அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளும் என தெரிவித்துள்ள பாஜக அமைச்சர் நமச்சிவாயம், குற்றவாளிகளுக்கு உதவிய காவல் அதிகாரி மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.