சிவகங்கையில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்த ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் அசோகன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “ஜெ.ஜெயலலிதா அவர்களின் மறைவுக்குப் பின் 2017ஆம் ஆண்டு ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் துணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக கட்சி வழிநடத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளை ரத்து செய்துவிட்டு அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதிமுக கட்சியின் தலைமை குழப்பத்தினால் தற்போது நடைபெற்ற ஈரோடு தேர்தலில் அதிமுக மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இதனால், அதிமுக சிவகங்கை மாவட்ட கட்சி உறுப்பினர்கள், மூத்த தலைவர்கள் ஒன்றிணைந்து ஓ பன்னீர்செல்வம் தலைமையில் கட்சியில் இருக்கும் மோதல்களை தவிர்ப்பதற்காக சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு நாளை மார்ச் 11ஆம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து அனுமதி கோரி சிவகங்கை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது.
ஆனால், இதுவரை ஆர்ப்பாட்டம் அனுமதி வழங்கப்படவில்லை. எனவே, ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.
தமிழ்நாடு அரசு தரப்பில், ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கலந்து கொள்ளும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கினால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள், மனுதாரரிடம் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சிவகங்கை துணை காவல் கண்காணிப்பாளரிம் உறுதிமொழி பத்திரம் வழங்க உத்தரவிட்டு ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.