“கலைஞரின் மனசாட்சி, வளரும் நாடுகளின் குரல் மிளிரும் முரசொலி மாறன்” முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை..!
முரசொலி மாறனின் திராவிட இயக்கப் பயணத்தை இன்றிய தலைமுறையினருக்கும் எடுத்துச் செல்வோம் என முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் 91-வது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
திராவிட முன்னேற்ற கழகம் தனித் திராவிட நாடு கோரிக்கையை கை விட்ட பிறகு, அந்த கோரிக்கைக்கான காரணங்களை இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் இந்திய இறையாண்மைக்கு உட்பட்டு வென்றெடுக்க முன் வைத்த செயல்திட்டம் தான் “மாநில சுயாட்சி”. பேரறிஞர் அண்ணா மற்றும் தலைவர் கலைஞரின் அந்த கனவுக்கு மிகத் தெளிவான உருவத்தையும் அதை அடைவதற்கான செயல் வடிவத்தையும் உருவாக்கிக் கொடுத்தவர்களில் மிக முக்கியமானவர் ஐயா முரசொலி மாறன் அவர்கள்!
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், கலைஞரின் மனசாட்சி ஆகவும், டெல்லியில் கழகத்தின் முகமாகவும், பின்னாளில் உலக அரங்கில் இந்தியா மட்டுமல்லாது அனைத்து வளரும் நாடுகளின் குரலாகவும் மிளிர்ந்த முரசொலி மாறன் அவர்களின் 91-ஆவது பிறந்தநாள் இன்று என குறிப்பிட்டுள்ளார்..
ஏன் வேண்டும் இன்பத் திராவிடம்? திராவிட இயக்க வரலாறு, மாநில சுயாட்சி என முரசொலி மாறன் படைத்தளித்த ஆக்கங்கள் கழகத்தின் அறிவுப் புதையலாகத் திகழ்வதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இறுதிவரை கொள்கை முரசமென ஒலித்த முரசொலி மாறனின் திராவிட இயக்கப் பயணத்தை இன்றைய தலைமுறையினருக்கும் எடுத்துச் சென்று அவருக்கு நன்றி செலுத்துவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்..