தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அகற்றம்..!! உடைந்து போன ரசிகர்கள்..!!
தவெக கொடி ஏற்றிய சிறிது நேரத்தில் காவல் துறை அனுமதி பெறப்படவில்லை என தாங்களாகவே கொடி கம்பங்களை அகற்றிய விஜய் ரசிகர்கள்.
கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் காலை அக்கட்சியின் தலைவர் விஜய் கொடியை ஏற்றி வைத்து அறிமுகம் செய்தார்.. இரண்டு சிவப்பு நிறங்களுக்கு, நடுவே மஞ்சள் நிற கொடியில் அதன் நடுவே இரண்டு போர் யானைகளுக்கு, நடுவில் வாகை மலருடன் இருக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் பல சிக்கல்கள் எழத் தொடங்கியது. அதாவது தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை படத்தை த.வெ.க கொடியில் பயன்படுத்துவது தேர்தல் விதியின்படி தவறானது என்றும், உடனடியாக விஜய் கட்சியின் கொடியில் உள்ள யானை படத்தை நீக்க வேண்டும், இல்லையென்றால் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு வழங்கப்பட்டு, வழக்கும் தொடுக்கப்படும் என்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் தெரிவித்தனர்., இந்த பிரச்சனை இப்படி கிடப்பில் இருக்க..
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று தமிழக வெற்றி கழகத்தின் கொடியை ரசிகர்கள் ஏற்றி கொண்டாடி வந்தனர். இந்நிலையில் சூசையாபுரம், கல்லம்பாளையம், மாஸ்கோ நகர் உள்ளிட்ட பகுதிகளில் கொடிக்கம்பங்கள் அமைக்க மாநகராட்சி இடம் அனுமதி பெற்ற தமிழக வெற்றி கழகத்தினர் போலீசாரிடம் அனுமதி பெறவில்லை என்பதால் கொடி கம்பத்தை அகற்ற அறிவுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து கொடிக்கம்பங்களை ரசிகர்கள் தாங்களாகவே அகற்றி சென்றனர் அனுமதி பெற்று மீண்டும் கொடிக்கம்பம் அமைத்துக் கொள்வதாகவும் ரசிகர்கள் தெரிவித்தனர். கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு கொடியேற்றப்பட்ட சிறிது நேரத்தில் மீண்டும் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.