கோடை வெப்பத்தை தணிக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் பெய்த மழை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கோடை வெப்பம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக இப்போதே தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் வெப்பநிலை சதம் அடித்துள்ளது. அக்னி வெயில் ஆரம்பிக்கும் முன்பே வாட்டி வதைக்கும் கோடை வெப்பத்தில் இருந்து மக்களை காக்கும் விதமாக நேற்று மாலை முதலே தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்துள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தேவதானப்பட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், வடுகபட்டி, கைலாசபட்டி, லட்சுமிபுரம், உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை அடுத்த தேன்கனிக்கோட்டையில் பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. திடீரென பெய்த ஆலங்கட்டி மழை கிராம மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை, திங்கள் சந்தை, அழகிய மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழையும், நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான புத்தேரி, பார்வதிபுரம், நத்தையார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்தது.
தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் மற்றும் செங்கோட்டை பகுதிகளில் சாரல் மழை பெய்ததால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதேபோல் ஈரோடு மாவட்டம் கோபி, கரட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழை அப்பகுதி விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Discussion about this post