சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டி அருகே ஊரணியில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறார்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை சிவகங்கை மாவட்டம் எல்லைப் பகுதியில் உள்ளது உலகம்பட்டி கிராமத்தை சேர்ந்த நாகராஜ் என்பவரது பத்து வயது மகள் யாழினி (எ) மீனாட்சியும், நாகராஜின் சகோதரரான லட்சுமணனின் 7 வயது மகனான மகேந்திரன் மற்றும் 5 வயது மகனான சந்தோஷும் படமஞ்சி பகுதியில் உள்ள செட்டிஊரணியில் குளிக்க சென்றுள்ளனர்.
ஊரணியில் குளித்துக்கொண்டிருந்த போது ஆழம் அதிகமுள்ள பகுதியில் ஒருவர் பின் ஒருவராக மூழ்கி மூன்று சிறார்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் அந்த ஊரணியில் சிறுவர்கள் சடலம் மிதந்ததை பார்த்து அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து காவல்துறையினருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
பின்னர் அந்த ஊரணியில் மிதந்த சிறார்கள் சடலங்களை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஊரணியின் கரைக்கு மீட்டு கொண்டு வந்த நிலையில் சிறார்கள் சடலத்தை பார்த்து அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதேபோல் கிராம மக்கள் கதறி அழுதனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற உலகம்பட்டி போலீசார் உயிரிழந்த மூன்று சிறார்களின் உடலையும் கைப்பற்றி புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வலையப்பட்டி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சிறுவர்கள் எப்படி ஊரணி பகுதிக்கு வந்தனர் அவர்கள் உயிரிழப்புக்கான காரணம் என்ன என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் உடற்கூறு ஆய்வு செய்யப்படவுள்ள பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு உயிரிழந்த சிறார்களின் பெற்றோர்களும் அதே போல் கிராம மக்களும் குவிந்துள்ளனர். மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறார்கள் ஊரணியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் உலகம்பட்டி கிராம மட்டுமின்றி புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்ட எல்லை பகுதியில் உள்ள மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.