ஈரோட்டில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 24 பேரிடம் 1 கோடியே 25 லட்சம் ரூபாய் பணம் வசூலித்து மோசடி செய்து விட்டு தலைமறைவான மின்வாரிய ஊழியரை 2 ஆண்டுகளுக்கு பின் போலீசார் கைது செய்தனர்..
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பூனாச்சி மின்வாரிய அலுவலகத்தில் கம்பியாளராக (ஒயர் மேன்) பணியாற்றி வந்தவர் மூர்த்தி. கடந்த 2016.ம் ஆண்டு மின் வாரியத்தில் பல்வேறு பணிகளுக்கு தேர்வாணையத்தின் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்ட போது, தனக்கு உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகளிடம் செல்வாக்கு இருப்பதாகவும், பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கி தருவதாகவும் அப்பகுதியினரிடம் கூறி உள்ளார்.
இதனை நம்பி அந்தியூர், அம்மாபேட்டை, பவானி உள்ளிட்ட பகுதிகளை சேர்த்தவர்கள் அவரிடம் பணம் கொடுத்தனர். மின்வாரியத்தில் தொழில் நுட்ப உதவியாளர், உதவி பொறியாளர், கணக்காளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தனித்தனியாக தொகை நிரணயம் செய்து மூர்த்தி பணம் வசூலித்துள்ளார்.
வேலை வாங்கி தராமல், மாதக்கணக்கில் காலம் தாழ்த்திய மூர்த்தியை பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி செய்ததால் போலியான பணி நியமண ஆணைகளை வழங்கி உள்ளார். பணி ஆணையை பெற்று கொண்டு அரசு அலுவலகம் சென்றவர்கள் அது போலியான ஆணை என்பது தெரியவந்தது.
இதனையடுத்து, பணத்தை இழந்து ஏமாற்றமடைந்த 24 பேர் 1 கோடியே 25 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கடந்த 2021 ம் ஆண்டில் புகார் அளித்தனர்.
இதனை அறிந்த மூர்த்தி தலைமறைவானார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த மாவட்ட குற்ற பிரிவு போலீசார் தலைமறைவாக இருந்த மூர்த்தியை இரண்டு ஆண்டுகளாக தேடி வந்தனர்.
இந்நிலையில் சிங்கம்பேட்டையில் அவர் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் மூர்த்தியை கைது செய்தனர். மோசடியில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும், மோசடி செய்த பணத்தை என்ன செய்தார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.