கடன் வாங்குபவர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி ஒரு நல்ல செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த முறை ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படாது என அறிவித்துள்ளது. உண்மையில், இம்முறை 25 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரெப்போ விகிதத்தை மாற்றாமல் தொடர ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக வீட்டுக்கடன் மற்றும் தனிநபர் கடன் பெற்றவர்களும் மற்ற கடன் பெற்றவர்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.
ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் இருமாத நாணயக் கொள்கை மறுஆய்வு கூட்ட (MPC Meeting) முடிவுகளை இன்று அறிவித்தார். நாணயக் கொள்கைக் குழுவின் ஆறு உறுப்பினர்களில் ஐந்து பேர், ரெப்போ விகிதத்தை மாற்றாமல் வைத்திருக்கும் முடிவிற்கு ஆதரவு அளித்ததை அடுத்து வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது.
பணவீக்கத்தை கட்டுப்படுத்த கடந்த நிதியாண்டில் இருந்து ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. இது கடந்த ஆண்டு மே மாதம் முதல் அதிகரித்து வருகிறது.
கடந்த நிதியாண்டில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை தொடர்ச்சியாக 6 முறை உயர்த்தியுள்ளது. ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் மூலமாக ரெப்போ வட்டி விகிதம் 6.50 சதவீதமாகவே தொடர உள்ளது.
ரெப்போ ரேட் என்பது ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான விகிதமாகும். ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தினால், வங்கிகளின் வட்டி விகிதமும் அதிகரிக்கும். இதன் விளைவாக, கடன் வாங்குபவர்கள் அதிக EMI செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.