பாக்கெட்டுகளில் ரேஷன் பொருட்கள்.. தமிழக அரசின் சூப்பர் ஐடியா!
அன்றாட சமையல் பொருட்களுக்கு அவதிப்பட்டு வரும் மக்களுக்காக, அரசு சார்பில், நியாய விலை கடைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கடைகளில், அரிசி, எண்ணெய், துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் பொதுமக்களுக்கு மிகவும் குறைந்த விலையில் விற்கப்பட்டு வருகிறது.
ஆனால், சில நியாய விலை கடைகளில், கொடுக்க வேண்டிய அளவை காட்டிலும், குறைவான அளவிலேயே பொருட்கள் வழங்கப்படுவதாக, பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனை தடுக்க வேண்டும் என்று, பல ஆண்டுகளாக பொதுமக்கள் கூறி வருகின்றனர்.
இந்தநிலையில், அரசு அதற்கு ஒரு தீர்வை தற்போது கொண்டு வந்துள்ளது. அதாவது, கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரின்போது, புதிய தீர்மானம் ஒன்று இயற்றப்பட்டது. அதில், “நியாய விலை கடைகளில் விற்கப்படும் பொருட்கள், இனிமேல் பேக்கெட்டுகளில் கொடுக்கப்படும்” என்று கூறப்பட்டிருந்தது.
இந்த திட்டம், தற்போது அமலுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகிறது. முதற்கட்டமாக, சேலம் மாவட்டத்தில் மட்டும் சோதனை அடிப்படையில், இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும், இதனை அதிகரிக்கும் வகையில், தொகுதிக்கு ஒரு ரேஷன் கடையில் மட்டும் தொடங்கவும், முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் மக்களிடம் பெறும் வரவேற்பை வைத்து, மற்ற ரேஷன் கடைகளுக்கு விரிவுப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
-பவானி கார்த்திக்