நிலவில் உள்ள பகுதிகளுக்குப் பெயர் வைக்கும் அதிகாரம் மோடிக்கு யார் கொடுத்தது? அவரது இந்தச் செயலைப் பார்த்து உலகம் சிரிக்கிறது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரஷித் ஆல்வி தெரிவித்துள்ளார்.
நிலவின் தென் துருவத்திற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 3 விண்கலமானது கடந்த 23-ந் தேதி மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. நிலவின் தென் துருவத்தில் உலகில் முதல் நாடாக இந்தியா கால்பதித்துள்ளது. விக்ரம் லேண்டரில் இருந்து, ரோவர் பத்திரமாக தரையிறங்கியது. ரோவர் பிரிந்து நிலவை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
லேண்டர் நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கியபோது தென்னாப்பிரிக்காவில் இருந்த பிரதமர் மோடி அங்கிருந்து வாழ்த்து தெரிவித்தார். இதனையடுத்து, தனது வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று நாடு திரும்பிய பிரதமர் மோடி, நேராக பெங்களூருவுக்குச் சென்று விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அதோடு, சந்திரயான்-2 தரையிறங்கிய பகுதிக்கு திரயங்கா என்றும், சந்திரயான்-3 தரையிறங்கிய பகுதிக்கு சிவ சக்தி என்றும் பிரதமர் பெயரிட்டார். அதோடு, இனி ஆண்டுதோறும் ஆகஸ்ட் 23-ம் தேதி தேசிய விண்வெளி தினமாக கடைப்பிடிக்கப்படும் என்றும் அறிவித்தார்.
நிலவில் உள்ள திரயங்கா, சிவசக்தி என பெயரிடப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவரான ரஷித் ஆல்வி, ‘நிலவில் உள்ள பகுதிகளுக்குப் பெயர் வைக்கும் அதிகாரம் மோடிக்கு யார் கொடுத்தது? அவரது இந்தச் செயலைப் பார்த்து உலகம் சிரிக்கிறது. நிலவின் பகுதிகளுக்கு பெயர் வைக்க நாம் ஒன்றும் அவற்றின் உரிமையாளர் கிடையாது’ என அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post