கடலுக்கு சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள்… இலங்கை கடற்படையால் கைது..!
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மீன் பிடிப்பதற்கான அனுமதி பெற்று, சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
மீனவர்கள் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்து கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படை ஒரு விசைப்படகையும் அதிலிருந்த 8 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்து மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
சிறைபிடிக்கப்பட்ட 8 மீனவர்களிடம் முதல்கட்ட விசாரணை முடித்துக்கொண்டு இன்று காலை மீனவர்கள் அனைவரும் படகுடன் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக இலங்கை கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ச்சியாக இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கையினால் மீனவர்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பவானி கார்த்திக்