புதுச்சேரியில் நாளை முதல் 26ம் தேதி வரை 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை கேள்வி நேரம் முடிந்த பிறகு, புதுச்சேரி பள்ளி கல்வித்துறை அமைச்சர் முக்கியமான அறிவிப்பை வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து பேச ஆரம்பித்த புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரியில் அதிக அளவில் புதிய வகை வைரஸ் தொற்று அசுர வேகத்தில் பரவி வருகிறது. எனவே இந்த வைரஸ் தொற்றில் இருந்து மாணவர்களை பாதுகாக்கும் விதமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்தார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை முதல் 26ம் தேதி வரை விடுப்பு அறிவிக்கப்படுவதாகவும் இதுகுறித்த அறிவிப்பாணை உடனடியாக அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என அறிவித்தார்.