ஏப்.1 முதல் பாரசிட்டமால் உள்ளிட்ட 800 மருந்துகளின் விலை 10.7% உயர்த்தப்படுவதாக இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் உற்பத்தி செலவீனம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில மாதங்களாகவே மருந்துகளின் விலையை அதிகரிக்க வேண்டும் என மருந்து உற்பத்தி நிறுவனங்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, இந்தியாவில் மருந்துகளின் விலையை கண்காணித்து வரைமுறை செய்து வரும் இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம், தற்போது அத்தியாவசிய மருந்துகளின் விலையை உயர்த்த அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி,வருகின்ற ஏப்ரல் மாதம் 1 தேதி முதல் பாரசிட்டமால் உள்ளிட்ட 800க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை, 10.7% வரை நேரடியாக உயர்த்தப்பட உள்ளது. தேசிய அத்தியாவச மருந்து பட்டியலில் பாராசிட்டமால், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், பாக்டீரியா தொற்று தடுப்பு மருந்துகள், ரத்த சோதை எதிர்ப்பு மருந்துகள், வைட்டமீன்கள் மற்றும் தாதுக்கள் போன்ற மருந்துகள் அடங்கும். மேலும், கொரோனா தொற்று மிதமாக மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பயன் படுத்தப்படும் சில மருந்துகள் மற்றும் ஸ்டீராய்டுகளின் விலையும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.