புதுச்சேரி பட்ஜெட்டை தாக்கல் செய்த முதலமைச்சர் ரங்கசாமி, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சிலிண்டருக்கு மாதம் ரூ.300 மானியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் ரூ. 11,600 கோடிக்கான முழு பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி இன்று தாக்கல் செய்தார். புதுச்சேரி சட்டப்பேரவையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு இலவசமடிக்கணினி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் தமிழ்வளர்ச்சி, ஆராய்ச்சியை மேம்படுத்த புதுச்சேரியில் உலகத்தமிழ் ஆராய்ச்சிமாநாடு நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட்டில் மகளிர் மேம்பாட்டிற்காக ரூ.1,330 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெண் குழந்தை பிறந்தால் ரூ.50,000 தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் 18 ஆண்டுகளுக்கு நிரந்தர வைப்பு நிதி செலுத்தப்படும்.
புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சிலிண்டருக்கு மாதம் ரூ.300 மானியம் வழங்கப்படும்.
அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வரப்படும். புதுச்சேரியில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் இலவச மடிக்கணினி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.