சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலர்..! சக பெண் காவலர்கள் செய்த செயல்..! குவியும் பாராட்டு..!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அகரம் பகுதியைச் சேர்ந்த “பரிமளா” ஆம்பூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பெண் தலைமை காவலராக பணியாற்றி வந்தார்.., இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 17ம் தேதி பணியை முடித்துவிட்டு, தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு அனைத்து காவலர்களும் இரங்கல் தெரிவித்தனர்..
அதன் பின் தற்போது பெண் தலைமைக் காவலர் பரிமளாவுடன் 2003ம் ஆண்டு முதல் தற்போது வரை ஒன்றாக பணியாற்றிய சக பெண் காவலர்கள், “நமக்குள் ஒன்றிணைவோம்.. நமக்காய் ஒன்றிணைவோம்” என்ற நோக்கத்தில், பரிமளாவின் குடும்பத்தினருக்கு உதவி செய்துள்ளனர்.
அதாவது, பரிமளாவின் பெண் மற்றும் ஆண் குழந்தையின் பெயரில் 10 லட்சம் மதிப்பிலான கேவிபி (KVP – Kisan Vikas Patra scheme) அஞ்சலக வைப்புத்தொகை பத்திரங்கள் மற்றும் அசல் ரசீதுகள் மற்றும் 1 லட்சத்து 96 ஆயிரம் ரொக்கத்தையும் பெண் காவலர் பரிமளாவின் குடும்பத்தினரிடம் கொடுத்துள்ளனர்.
அதனை தொடர்ந்து பெண் காவலர் பரிமளாவின் திருவுருப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி, அவருடன் பணியாற்றிய நிகழ்வுகளை கண்ணீர் மல்க நம்மிடம் பகிர்ந்து கொண்டனர். சக காவலர்களின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்…
– லோகேஸ்வரி.வெ