சென்னையைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அரசுப் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 23 ம் தேதி பள்ளி முடிந்து வீட்டுக்குச் சிறுமி புறப்பட்டார். அப்போது சிறுமி படிக்கும் பள்ளியின் அறிவியல் ஆசிரியர் மோகன் என்பவர், சிறுமியின் கையைப் பிடித்து, வகுப்பறைக்குள் அழைத்து சென்றுள்ளார்.
வகுப்பறையில் சிறுமிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.அதிர்ச்சியடைந்த சிறுமி வகுப்பறையிலிருந்து வெளியில் ஓடி சென்று விட்டார். அடுத்த நாள், தனக்கு நடந்தது குறித்து அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ஒருவரிடம் மாணவி கண்ணீருடன் கூறியுள்ளார்.
இதையடுத்து, ஆசிரியைச் சிறுமியை அழைத்துக் கொண்டு பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் சென்று விஷயத்தை கூறினார். தொடர்ந்து, பாலியல் தொல்லை கொடுத்த அறிவியல் ஆசிரியர் மோகன் மீது நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுக்குத் தலைமை ஆசிரியை தகவல் கொடுத்தார். இதனால், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அறிவியல் ஆசிரியர் மோகனிடம் விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது, ஆசிரியர் மோகன் விளக்கம் கூறியுள்ளார். இந்தநிலையில் சிறுமியின் தாயார் ஏப்ரல் 29ம் தேதி விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆசிரியர் மோகன் மீது புகாரளித்தார் . இதனால், போலீஸார், சிறுமி படிக்கும் அரசுப் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, ஆசிரியர் மோகன், திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை மருத்துவமனையில் சிசிக்சைக்கு சேர்த்தனர். விசாரணைக்குப் பயந்து அவர் தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டது தெரியவந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆசிரியர் மோகனுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மோகனின் உடல் நிலை தேறியதும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.