சென்னையில் முன்னாள் பிரதமர் விபி சிங்குக்கு சிலை வைப்பது வரவேற்கத்தக்கது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லிற்கு இன்று 20.04.23 வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில் :- சமூக நீதிக் காவலர் வி பி சிங்க்கு தமிழகத்தில் திரு உருவ சிலை திறப்பது என்பது வரவேற்கத்தக்கது. விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்று பாராட்டுகிறது. வருகின்ற 22 ஆம் தேதி கிருஷ்ணகிரியில் ஆணவ படுகொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆணவ படுகொலை சட்டம் ஏற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளும், சலுகைகளும் பெற்றுத்தர தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனி தீர்மானம் கொண்டு வந்துள்ளார். அதனை விடுதலை சிறுத்தைகள் சார்பில் வரவேற்கிறோம். சமூக நீதி வரலாற்றில் இது ஒரு மைல் கல்.
திமுக தலைமையிலான கூட்டணி வலுவான கூட்டணி. இந்த கூட்டணியில் எந்த சிக்கலும் கிடையாது. திமுக விற்கும் விடுதலை சிறுத்தைகளுக்கும் இடையே நட்புணர்வு, கொள்கை சார்ந்த உறவு. தேர்தல் களத்தில் மட்டும் அல்லாது சமூக நீதிக்கான களத்தில் தொடர்ந்து இணைந்து பயணிக்க கூடிய வலுவை பெற்று இருக்கக் கூடிய கூட்டணி ஆகும். அதனால் தொடர்ந்து நாங்கள் திமுக கூட்டணியில் பயணம் செய்து கொண்டு இருக்கிறோம்.
Discussion about this post