ஓயோ நிறுவனர் ரிதேஷ் அகர்வாலுக்கு திருமணமாகி மூன்று நாட்களே ஆன நிலையில் அவரது தந்தை 20வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழ்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
2013ம் ஆண்டு ஓயோ ரூம்ஸ் நிறுவனத்தை தொடங்கிய ரிதேஷ் அகர்வால், இந்தியாவிலேயே இளம் வயது தொழில்முனைவராகவும், கோடீஸ்வரராகவும் வலம் வருகிறார். 19 வயதில் ஓயோ ஆப் மூலமாக ஓட்டல் மற்றும் விடுதிகளில் ரூம்களை புக் செய்யும் வசதியை அறிமுகப்படுத்திய ரிதேஷ் தற்போது அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் செயல்பட்டு வருகிறார்.
தற்போது 29 வயதான ரிதேஷுக்கும், கீதன்ஷா சூட் என்பவருக்கும் கடந்த மார்ச் 7ம் தேதி டெல்லி தாஜ் பேலஸ் ஹோட்டலில் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது. மனைவி கீதன்ஷா மற்றும் தந்தை ரமேஷ் அகர்வால், தாய் ஆகியோருடன் ரிதேஷ் குருகிராமில் வசித்து வந்துள்ளார்.
ஹரியானா மாநிலம் குருகிராமின் செக்டார் 54ல் உள்ள டிஎல்எஃப் க்ரெஸ்ட் சொசைட்டி என்ற அடுக்குமாடி குடியிருப்பின் 20வது மாடியில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், நேற்று மதியம் 1 மணி அளவில் ரிதேஷின் தந்தை தனது அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மகனுக்கு திருமணமான மூன்றே நாட்களில் பிரபல தொழிலதிபரின் தந்தை கொடூரமாக மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ரமேஷ் 20வது மாடியில் இருந்து எப்படி கீழே விழுந்தார்? தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.