பிரபல நடிகை பானு பிரியாவின் சகோதரியான சாந்தி பிரியா, நடிகர் ராமராஜனுடன் ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தின் நாயகியாக அறிமுகமானவர் . கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் இடம் பெற்ற ‘செண்பகமே செண்பகமே’ பாடல் சாந்தி பிரியாவை தமிழ்நாட்டுக்கு அடையாளம் காட்டியது. சில காலம் கொடிகட்டி பறந்த இவர் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். தற்போது, மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி கொண்டிருக்கிறார்.
கடந்த 1992ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் சித்தார்த் ராய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆனார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், 2004-ஆம் ஆண்டு தான் சாந்தி பிரியாவின் கணவர் திடீரென உயிரிழந்தார். தனது கணவர் குறித்து சாந்தி பிரியா கூறுகையில், காதலித்து திருமணம் செய்து கொண்டது, தனது தாயாருக்கு பிடிக்கவில்லை. பாலிவுட்டில் இப்போதுதான் பிஸியாக நடித்துக்கொண்டு கொண்டிருக்கிறாய்? இந்த நேரத்தில் திருமணம் தேவையா? என்று எனக்கு அறிவுரை சொன்னார். ஆனால், அந்த நேரத்தில் காதல் என் கண்ணை மறைத்து விட்டது. சித்தார்த்தை மணந்து கொண்டு குடும்பம்தான் முக்கியம் என்று கருதி சினிமாவில் இருந்து முழுமையாக விலகினேன்.
என் பெரிய மகனுக்கு 14 வயது, சின்ன மகனுக்கு 4 வயது இருக்கும்போதே சித்தார்த் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டார். கணவர் இறந்து 20 வருடங்களாகிறது. ஆனால், இப்போதும் அவருடைய நினைவில் வாழ்கிறேன். தனது தாயார் பல முறை சென்னை வந்துவிடு என்று கேட்டுக் கொண்டார் ஆனால், என் கணவர் வாழ்ந்த அந்த வீட்டை விட்டு என்னால் எங்கேயும் வரமுடியவில்லை, அவரது மரணம் உலுக்கி எடுத்த விட்டது. எனது கணவர் இறந்த பிறகு, வெள்ளை நிற உடையைத் தவிர வேறு எந்த உடையையும் அணிந்துக்கொள்ளவில்லை. யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை. ஆனால், நானே என்னை மாற்றிக் கொண்டேன். என் நிலைமையைப் பார்த்த என் அம்மா மிகவும் பயந்து போனார். உன்னுடைய இரண்டு மகன்களை நான் பார்த்துக்கொள்கிறேன். நீ இரண்டாவது திருமணம் செய்து கொள் என்றார்கள்.
எனக்கு அதில் ஈடுபாடு இல்லை. அந்த துயரத்தில் இருந்து மீள நான் பல விஷயங்களை செய்தேன். கடைசியாக எனக்கும் ஏதோ ஒரு மாற்றம் வேண்டும் என நினைத்துத்தான் மொட்டை அடித்துக் கொண்டேன். ஆனால், இணையத்தில் பலர், சாந்தி பிரியாவிற்கு ஏதோ நோய் வந்துவிட்டது, வேண்டுதலுக்காக மொட்டை அடித்திருக்கிறார் என்று வதந்தியை பரப்புகிறார்கள். அது, உண்மை இல்லை, இது ஒரு மாற்றத்துக்காக அடிக்கப்பட்ட மொட்டை என்று கூறியுள்ளார்.