வரி விலக்கு உள்ள மஞ்சளுக்கு ரூபாய் ஒரு லட்சம் வரி வாங்கியதாக எழுந்த புகாரின் படி அந்த தொகையை திரும்ப பெற்றுத் தருமாறு அமைச்சர் மூர்த்தி நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வணிக வரித்துறை சார்பில் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்க பிரதிநிதிகளின் கருத்து கேட்பு கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி கலந்துக்கொண்டு சேவை வரி தொடர்பாக சங்கங்களின் பிரதிநிதிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்தார். இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் வேளாண் தங்கம் பித்தளை பெட்ரோலியம் சரக்கு போன்ற பல்வேறு வணிகர் சங்கத்தினர் கலந்துக்கொண்டனர்.
இதன்பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி பேசியதாவது,
வணிகர்களை அழைத்து ஆலோசனை கேட்டு, குறைகளுக்கு தீர்வு காண கூட்டம் நடைப்பெற்றது.சில பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரிகளை குறைக்க வணிகர்கள் கோரியிருக்கிறார்கள்
அடுத்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் வணிகர்களின் கோரிக்கை குறித்து தமிழ்நாடு சார்பில் வலியுறுத்தப்படும். அரிசி மீதான ஜிஎஸ்டி குறைக்க பெரும்பாலான வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிதி அமைச்சர் மூலமாக ஜிஎஸ்டி கவுன்சில் இதுகுறித்து எடுத்துக் கூறி நடவடிக்கை எடுக்கப்படும். தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக், பான் குட்கா போன்ற பொருட்களை வணிகர்கள் விற்பனை செய்தால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆடு மாடுகளுக்கு வாங்கப்படும் தவிடிற்கு வரி கிடையாது, ஆனால் அதே தவிட்டை எண்ணெய்க்கு வாங்கும்போது வரி இருக்கிறது. எனவே தவிடு எந்த பயன்பாட்டிற்கு வாங்கப்படுகிறது என்று தெளிவுபடுத்தப்படும். சேலத்தில் வியாபாரி ஒருவரிடம் வரி விலக்கு அளிக்கப்பட்ட மஞ்சளுக்கு வரி வசூல் செய்ததாக எழுந்த புகாரில், வசூலிக்கப்பட்ட வரியை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.