சந்திராயன்-3 திட்டம் குறித்து பாடப் புத்தகத்தில் இடம்பெறும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
அண்மையில் சந்திரயான்-3 விண்கலம் தயார் செய்யப்பட்டு நிலவுக்கு ஏவப்பட்டு வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்தியாவே பெருமைப்படும் தருணமாக அமைந்துள்ள இந்த நிகழ்வுக்கு இயக்குநராக பணியாற்றியவர் ஒரு தமிழர் ஆவார். வீர முத்துவேல் உட்பட பலரும் இதில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். உலகமே இன்று வியக்கும் இந்தியாவின் இந்த சாதனை தமிழர்களும் முக்கிய புள்ளிகளாக இருக்கும் நிலையில், சந்திரயான் குறித்து தமிழ்நாடு பாடப்புத்தகத்தில் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் 162 பேர் கலந்து கொண்டனர், அவர்களிடம் தமிழ் கூடல் நிகழ்ச்சிக்கான விதியை வழங்கிய பின் அமைச்சர் அன்பின் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்;
அரசு பள்ளி மாணவர்களின் சாதனையை எடுத்துக்காட்டும் வகையில் சந்திரயான் திட்டம் அமைந்திருந்ததால் அது குறித்து சிறிய அளவிலேனும் பாடப்பகுதியில் இடம்பெறுவதற்கு பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்கப்படும். நாங்குநேரி போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு நீதி அரசர் சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதால் பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களுக்கு கூடுதலாக ஒரு தேர்வை நடத்தாமல் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்குவதற்குரிய பரிந்துரை தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் அது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு 149 அரசாணை திரும்ப பெறுவதற்கு ஏற்ற வகையில் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் பெறப்படும். தனியார் பள்ளிகளில் தமிழை கட்டாயமாக நடத்துவதற்கு தனியார் பள்ளி நிர்வாகத்துடன் இன்னும் சில தினங்களில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
பின்னர், தமிழ்நாடு அரசு கொண்டுவரும் மாநில கல்வி கொள்கைக்கு யுஜிசி தலைவர் அதிருப்தி தெரிவித்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், அவர்கள் வந்தே பாரத் ரயில் மூலம் வட மாநிலங்களுக்கு சென்று அங்குள்ள நிலைமையை ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் பார்க்க வேண்டும், அதன் பின் தமிழகத்தின் கல்வி உள்ளிட்ட வளர்ச்சிகள் எவ்வாறு உள்ளது என்பது குறித்து கண்கூடாக பார்த்த பிறகு ஆளுநர் உள்ளிட்டவர்கள் மாநிலக் கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம் .மேலும் மாநிலக் கல்விக் கொள்கைக்கு ஆளுநர் ஒப்புதல் தராவிட்டாலும் தமிழக முதலமைச்சர் உரிய நடவடிக்கை மூலம் ஒப்புதல் பெற முயற்சி எடுக்கப்படும் என்றார்.
Discussion about this post