Wednesday, June 25, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

இந்தியாவின் பெயர் மாற்றம்.. பாஜகவின் சதித் திட்டம்.. அனைத்தையும் நாட்டு மக்களுக்கு போட்டுடைத்த மதிமுக மாநாடு… முழு விவரம் உள்ளே..!

இந்தியாவை சீர்குலைக்க நினைக்கும் பாஜகவை அகற்றுவது ஒன்றே முற்றுப்புள்ளியாக இருக்கும் என மதிமுக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

by Dharma
October 31, 2023

இந்தியாவை சீர்குலைக்க நினைக்கும் பாஜகவை அகற்றுவது ஒன்றே முற்றுப்புள்ளியாக இருக்கும் என மதிமுக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பேரறிஞர் அண்ணா 115 ஆவது பிறந்தநாள் விழாயொட்டி மதிமுக திறந்தவெளி மாநாடு மதுரையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைப்பெற்று வருகிறது. இந்த மாநாட்டில் மதிமுக சார்பில் மொத்தம் 14 தனித்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவை அனைத்தையும் தெளிவாக பார்ப்போம்.

தீர்மானங்கள்

தீர்மானம் 1:

இந்தியாவை பாரதம் என்றே அழைக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்., பாஜக கூப்பாடு போடுவதின் உண்மை நோக்கம் என்ன?

பரதன் என்ற அரசர் சந்திர குல வம்சத்தைச் சேர்ந்தவன். முதல் சக்கரவர்த்தியாக இந்து தேசத்தை ஆண்டவன் அவன் தானாம். தன்னுடைய இராஜ்யத்தில் இந்து தேசத்தின் சகலப் பகுதிகளையும் ஒன்றாக இணைத்து ஒரே குடையின் கீழ் ஆண்டான் என்று, மகாபாரதத்தில் ஒரு பாடல் வருகிறது. எனவேதான் இந்த தேசம் பாரத தேசம் பரத கண்டம் அவன் வழி வந்தவர்கள் பாரதியர்கள் என்று புராணங்களின் அடிப்படையிலேயே இவர்கள் வரலாற்றைத் திரித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

பாரத தேசம் என்று இவர்கள் சொல்வதும் பாரதியம் என்று இவர்கள் சொல்வதும் இது இந்துக்களினுடைய நாடு என்பதைத்தான் வெளிப்படையாக பிரகடனப் படுத்திக் கொண்டு இருக்கிறது. இந்தியாவை இந்தியா என்று அவர்கள் ஒப்புக் கொள்ளாத நோக்கத்தை ஆர்.எஸ்.எஸ். குரு கோல்வாக்கர் விளக்கியிருக்கிறார். இந்தியா என்றால் கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் உள்ளடக்கும், பாரதம் என்று சொன்னால் இந்துக்களை மட்டும் தான் குறிக்கும் என்று கூறுகிறார்.

பாரதம் என்று இந்தியாவின் பெயரை மாற்றுவதற்கான முயற்சி என்பது இந்து ராஷ்டிரம் அமைப்பதற்கான முதல் அத்தியாயம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆர். எஸ். எஸ், இந்துத்துவா செயல் திட்டத்தின் ஒரு பகுதியாகவே மோடி அரசு இந்தியாவின் பெயரை பாரதம் என்று மாற்றுவதற்கு முனைந்திருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.

பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை சீர்குலைக்க நினைக்கும் பாரதிய ஜனதா கட்சியை ஆட்சி பீடத்திலிருந்து அகற்றுவது ஒன்றுதான் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் ஒரே தீர்வு என மதிமுக மாநாடு பிரகடனம் செய்கிறது.

தீர்மானம் 2:

இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவை புதிய பெயர் கொண்ட சட்டங்கள் மூலம் மாற்ற சட்ட முன்வரைவு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.அதன்படி இந்திய தண்டனைச் சட்டத்திற்குப் பதிலாக பாரதீய நியாய சன்ஹிதா, குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்குப் பதிலாக பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, இந்திய சாட்சியச் சட்டத்திற்குப் பதிலாக பாரதீய சாக்ஷ்யா என அழைக்கப்படும் என்று இந்த சட்ட திருத்த முன்வரைவில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா என்ற பெயரையே மாற்றத் துடிக்கும் இந்துத்துவ சனாதனக் கூட்டம், இதற்கு முன்னோட்டமாக சட்டங்களில் உள்ள “இந்திய” என்ற பெயரை “பாரதீய” என்று மாற்ற முனைந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் இயங்கி வரும் மோடி அரசு செத்துப் போன சமஸ்கிருத மொழிக்கும் ,இந்தி மொழிக்கும் செல்வாக்குத் தேட முயற்சிப்பதும்,நகரங்கள்,ஊர்கள் பெயர்களை மாற்றி வருவதும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றது.

அதன் உச்சமாக சட்டங்களின் பெயரையும், ஏன் நாட்டின் பெயரையும் மாற்றிட துணிந்து விட்டது. ஒன்றிய பாஜக அரசின் இந்நடவடிக்கை கடும் கண்டனத்துக்கு உரியது. நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு உலை வைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என மதிமுக மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 3:

2014இல் நரேந்திர மோடி தலைமையில் பாரதிய ஜனதா கட்சி அரசு பொறுப்பேற்றதிலிருந்து ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கல்வி முறை, ஒரே வரி, ஒரே குடும்ப அட்டை என்று எல்லாவற்றையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து டெல்லியில் அதிகாரங்களை குவித்து வைத்துக் கொண்டு எதேச்சதிகார ஆட்சி நடத்துகிறது.

இதன் உச்சகட்டமாக ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்று நீண்ட காலமாக பாஜக கூறிவரும் திட்டத்தை செயல்படுத்த மோடி அரசு தீவிரமாக முனைந்திருக்கிறது. இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் அவர்கள் தலைமையில் ஒரே நாடு; ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்திட ஒன்றிய பாஜக அரசு குழுவை அறிவித்திருக்கிறது.

குடியரசு தலைவர் பதவியில் இருந்தவரை மரபுகளை மீறி இத்தகைய குழுவுக்கு தலைவராக நியமித்த மோடி அரசின் செயல் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல கண்டனத்துக்குரியது.

குடியுரிமைத் திருத்தச் சட்டம், காஷ்மீர் சிறப்புரிமைச் சட்ட நீக்கம், பசுவதைத் தடுப்புச் சட்டம், லவ் ஜிகாத் தடுப்புச் சட்டம், மதமாற்றத் தடைச்சட்டம், புதிய கல்வி(காவி)க் கொள்கை, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (உஃபா), என்.ஐ.ஏ, சொத்துசேதத் தடுப்புச் சட்டம், ஆதாரை வாக்காளர் அட்டையுடன் இணைப்பது என பல்வேறு சட்டங்களை கொண்டு வந்த பாஜக அரசு, அதன் வரிசையில் தற்போது, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ சட்டத்தையும் நடைமுறைக்கு கொண்டுவர இருக்கிறது.

2014 இல் இருந்தே பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தை முன்வைத்து வருகிறது. இதை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்களை 2017 ஆம் ஆண்டு நிதி ஆயோக் வகுத்துக் கொடுத்தது.

2018 ஆம் ஆண்டு சட்ட ஆணையம் இந்த ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்திற்காக அரசியலமைப்புச் சட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது.

இந்நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதியன்று, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா “ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நல்ல பரிந்துரை. ஆனால் இதற்கு அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அனைத்து தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது” என கூறி, பா.ஜ.க செயல் திட்டத்திற்கு ஒத்துழைக்கத் தயார் என்று பச்சைக் கொடி காட்டினார்.

தலைமைத் தேர்தல் ஆணையாளர் கூறியவாறு அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து, ஒரே நாடு; ஒரே தேர்தல் முறையைச் செயல்படுத்த தொடக்கமாக, செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் செப்டம்பர் 28 ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.

இந்தச் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ சட்ட முன்வரைவு தாக்கல் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

மக்களாட்சி கோட்பாடுகளின் ஆணிவேர்களை அறுத்து எரிந்து நாடாளுமன்ற ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து, சர்வாதிகார இந்துராஷ்டரத்தைக் கட்டமைக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்., பாஜகவின் திட்டத்தை ஜனநாயக முற்போக்கு சக்திகள் கரம் கோர்த்து முறியடிக்க வேண்டும் என்று மதிமுக மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 4:

நூலகச் சட்டம் தமிழகத்தில் முதன் முதலாக 1948 இல் உருவாக்கப் பட்டது. பின்னர் பல மாநிலங்களில் உருவாக்கப்பட்டன. நூலகங்கள் மாநில உரிமைகள் பட்டியலில் உள்ளது. ஒன்றிய அரசு பலமுறை சட்ட முன்வரைவு செய்து, இந்திய நூலகச் சட்டத்தை பொதுப்பட்டியலில் சேர்க்க முயற்சித்து வருகிறது.

1976 ஆம் ஆண்டு கல்வியைப் பொதுப்பட்டியலுக்கு எடுத்த பொழுது கூட அத்துறையின் கீழிருந்த நூலகத்தை மாநிலப்பட்டியலிலையே விட்டுவிட்டது. தற்பொழுது ஒன்றிய அரசு நூலகத்துறையைப் பொதுப்பட்டியலுக்கு மாற்றுகிறது.

சீர்காழி இராமாமிருதம் அரங்கநாதன் கணிதவியலாளரும், நூலகவியலாளரும் ஆவார். நூலகவியலின் ஐந்து விதிகளை அறிமுகம் செய்தவர். கோலன் நூற்பகுப்பாக்க முறையை உருவாக்கியவர்; இந்திய நூலகவியலின் தந்தை என அறியப்படுபவர். அத்துடன், நூலகவியலில் இவர் உலகப் புகழ் பெற்றவர்.

இவர் தான் இந்தியவில் நூலகச் சட்டத்திற்கு காரணமானவர். இந்திய அரசு இவரை சட்டம் இயற்றப் பணித்தது.

தமிழகம் நூலகச்சட்டத்தின் முன்னோடியாக உள்ளது. அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் புதிய கட்டடங்களுடன் நூலகம் ஏற்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள 4640 நூலகங்களில் 1915 நூலகங்கள் கிராமங்களில் உள்ளன.

தமிழகத்தில் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் நூலகம் உண்டு. அதனை இணைத்துப் பார்த்தால் தமிழக நூலக எண்ணிக்கை அதிகம்.

மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் விதமாக ஒன்றிய பாஜக அரசு, நூலகங்களை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்ல முனைந்து இருப்பதை கைவிட வேண்டும் என இந்த மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 5:

15.08.2023 அன்று சுதந்திர தின விழாவில், தேசியக் கொடியை உயர்த்தி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி, “செப்டம்பர் 17 ஆம் தேதி விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்படும்” என அறிவித்தார். இத்திட்டத்திற்காக 13 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கருவிகள் மூலமும், கைகள் மூலமும் பொருட்களை செய்பவர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள்.

இத்திட்டத்தில் முதற்கட்டமாக 18 தொழில்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி, தச்சர், பொற்கொல்லர், குயவர், சிற்பிகள், காலணி தைப்பவர், கொத்தனார், கூடை பாய், துடைப்பம் நெய்பவர், பொம்மைகளை செய்பவர்கள், முடி திருத்துபவர்கள், பூமாலைகளை கட்டுபவர்கள், சலவைத் தொழிலாளர், தையல்காரர், மீன்பிடி வலை தயாரிப்பவர், படகு தயாரிப்பவர்கள், கவசம் தயாரிப்பவர்கள், இரும்புக் கொல்லர்கள், சுத்தியல் மற்றும் கருவிகள் செய்பவர்கள், பூட்டுகள் செய்பவர்கள் போன்றவர்கள் இதில் அடங்குவர்.

இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெறுபவர்களுக்கு பயிற்சி நாள்களில் தினமும் ரூ.500 உதவித் தொகையாக வழங்கப்படும். தொழிற்கருவிகளை பெற ரூ.15,000 வரை நிதியுதவியும் வழங்கப்படும். 5 ஆண்டுகளில் இத்திட்டம் மூலம் 30 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும். இத்திட்டத்தில் குறைந்த வட்டியில் கடனும் வழங்கப்படும் என ஒன்றிய பாஜக அரசு அறிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ் வழிகாட்டுதலின் கீழ் இயங்கும் ஒன்றிய பாஜக அரசு, 18 வகையான குலத் தொழில்களை பட்டியலிட்டு, வர்ணாசிரம முறையை நிலைநாட்ட முனைந்திருப்பதற்கு மதிமுக மாநாடு கடும் கண்டனம் தெரிவிப்பதுடன் விஸ்வகர்ம யோஜனா திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறது.

தீர்மானம் 6:

நீட் தேர்வு அறிமுகப்படுத்தபட்டதிலிருந்து 2017 இல் அரியலூர் அனிதாவில் தொடங்கி இதுவரை ஏறத்தாழ 20 மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துள்ளனர்.

ஒவ்வோர் ஆண்டும் தமிழ் நாட்டில் நீட் தோல்வி காரணமாக தற்கொலைகள் என்னும் கொடூரச்சாவுகள் நடந்துகொண்டிருக்கின்றன. இதற்கு முற்றுப்புள்ளி எப்போது வைக்கப் போகிறோம்?

மறுபுறம் நீட் தேர்வு விலக்கு மசோதாவில் கையெழுத்து இட மாட்டேன் என்று ஆளுநர் ஆர்.என். ரவி கொக்கரித்த நாளில், குரோம்பேட்டை மாணவரும், அவருடைய தந்தையும் உயிரை மாய்த்துக் கொண்ட சோகம் நிகழ்ந்தது.

கல்வித்துறையில் மாநில அரசின் உரிமைகளைப் பறித்து ஏக போக ஆதிக்கம் செலுத்தி வரும் ஒன்றிய அரசின் போக்கினால் இன்னும் எத்தனை மாணவர்களின் உயிர்களை இழக்க நேரிடுமோ என்ற கவலை ஏற்பட்டு உள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட முன்வரைவுக்கு உடனடியாக ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என மதிமுக மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 7:

தமிழ்நாட்டில் உயர்கல்வித் துறையின் கீழ் 13 பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. இந்தப் பல்கலைக்கழகங்களுக்கு என்று தனித்தனியே சட்டம் மற்றும் விதிகள் உள்ளன.

இவற்றின்படி துணைவேந்தரின் பதவிக்காலம் முடிந்தவுடன் அதை நிரப்ப தேடுதல் குழு அமைக்கப்பட்டு, அதன்மூலம் துணைவேந்தர் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்படுவார்.

உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் பல்கலைக்கழக சட்ட விதிகளில், ஆளுநர், துணைவேந்தரை தேர்வு செய்யும் தேர்வுக்குழுவை அமைக்க வழிமுறை இல்லை. பாரதியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவிக்காலம் 17.10.2022 அன்றும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவிக்காலம் 30.11.2022 அன்றும் முடிவடைந்தது.

அதனால், தேடுதல் குழு உறுப்பினர்கள் அந்தந்த பல்கலைக்கழகங்களின் விதிகளின்படி நியமனம் செய்யப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலோடு தமிழ்நாடு அரசிதழில் முறையே 20.09.2022 மற்றும் 19.10.2022 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டது.

இதுவரையில் எந்தவொரு ஆளுநரும் தன்னிச்சையாக தேடுதல் குழுவை அமைத்ததில்லை. அதற்கு விதிகளில் வழிவகையும் இல்லை. தேர்வுக்குழு குறித்த விவரங்களை அரசுதான் அரசிதழில் வெளியிடும். இதுநாள் வரையிலும் தேடுதல் குழு உறுப்பினர்கள் அந்தந்த பல்கலைக்கழக சட்டவிதிகளின்படி நியமிக்கப்பட்டு அரசாணை வெளியிட்டு, அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது ஆளுநர் அவர்கள் நடைமுறையில் உள்ள பல்கலைக்கழக சட்ட விதிகளுக்கு எதிராக தேடுதல் குழுவை தன்னிச்சையாக முடிவு செய்து அறிவிக்கை வெளியிட்டுள்ளார்

தமிழகத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழகம், கல்வியியல் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக்கழகங்களுக்கும் துணை வேந்தர்களை தேர்வு செய்வதற்கு 4 பேர் அடங்கிய தனித்தனிக் குழுக்களை அமைத்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.

சென்னைப் பல்கலைக்கழம்: தமிழக ஆளுநரின் பிரதிநியாக, கர்நாடக மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் பட்டு சத்யநாராயணாவும், தமிழக அரசின் பிரதிநிதியாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், மாநில திட்டக் குழுவின் உறுபினருமான கே.தீனபந்துவும், பல்கலைக்கழக செனட் பிரதிநிதியாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பி.ஜெகதீசனும், யுஜிசி பிரதிநிதியாக, தெற்கு பிஹார் மத்தியப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ஹெச்சிஎஸ் ரத்தோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கல்வியியல் பல்கலைக்கழகம்: தமிழக ஆளுநரின் பிரதிநியாக, யுஜிசி உறுப்பினர் பேராசிரியர் சுஷ்மா யாதாவாவும், தமிழக அரசின் பிரதிநிதியாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.அலாவுதீனும், பல்கலைக்கழக செனட் பிரதிநிதியாக தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டி.பத்மநாபனும், யுஜிசி பிரதிநிதியாக, தெற்கு பிஹார் மத்தியப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ஹெச்சிஎஸ் ரத்தோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகம்: தமிழக அரசின் பிரதிநிதியாக, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பிடபிள்யூசி.டாவிதாரும், பல்கலைக்கழக சிண்டிகேட் பிரதிநிதியாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பி.துரைசாமியும், பல்கலைக்கழக செனட் பிரதிநியாக பாரதியார் பல்கலைக் கழகம் மற்றும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஜி.திருவாசகமும், யுஜிசி பிரதிநிதியாக, பெங்களூரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பி.திம்மேகவுடாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழக மானிய குழு விதிகளை மீறியும், மாநில அரசின் அதிகாரத்தை பறித்தும் எதேச்சாதிகாரமாக துணைவேந்தர் தேடுதல் குழுவை அமைத்துள்ள தமிழ்நாடு ஆளுநருக்கு இம்மாநாடு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ்நாடு அரசு இதனை சட்டபூர்வமாக எதிர்கொள்ளும் என்று வெளியிட்ட அறிவிப்பை மதிமுக மாநாடு வரவேற்கிறது.

தீர்மானம் 8:

தமிழகத்தில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி ஒன்றிய அரசு அறிவித்தது. இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் முதன்மையானதாக கருதப்படும் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை தமிழகத்துக்கு வருவதை அறிந்த தமிழக மக்கள் உயர்தர சிகிச்சை விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால், இடம் தேர்வு செய்வது முதல் நிதி ஒதுக்குவது வரை, கடந்த 8 ஆண்டுகளாக மதுரை எய்ம்ஸ் கிடப்பில் போடப்பட்டது.

கடந்த 2018 ஜூனில் மதுரை மாவட்டம், தோப்பூரில் சுமார் 224.24 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என ஒன்றிய அரசு அறிவித்தது.

இந்தியா முழுவதும் மற்ற மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு நேரடியாக நிதி ஒதுக்கியது. ஆனால், தமிழகத்தில் அமையும் மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு மட்டும் ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனத்திடம் கடன் கேட்டது. அந்த நிறுவனம், கடன் வழங்க ஒப்புக் கொண்டாலும், அதற்கான நடைமுறைகள், ஆய்வுப் பணிகளுக்கு தாமதம் செய்தது.

இதற்கிடையில், ஒன்றிய அரசு, மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை கட்டுமானப்பணியை தொடங்காமலேயே, இந்த மருத்துவமனை கல்லுரிக்கான 50 எம்பிபிஎஸ் இடத்துக்கான மாணவர் சேர்க்கையை நடத்தி, மதுரையில் வகுப்பறை வசதியில்லாததால் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில், தற்காலிகமாக வகுப்புகளை தொடங்கியது. தற்போது மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துக்கல்லூரி மாணவர்கள், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த 2 ஆண்டாக படித்துக் கொண்டிருக்கின்றனர்.

மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையுடன் அறிவித்த நாட்டின் பிற மருத்துவமனை கட்டுமானப்பணிகள் முடிந்தும், தொடங்கி நடக்கும் நிலையில் 2022 இல் திறக்கப்பட வேண்டிய மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை மட்டுமே, பணிகள் எதுவுமே துவங்காமல், பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியதோடு நிற்கிறது.

பிரதமர் மோடி, அடிக்கல் நாட்டு விழாவில் 45 மாதங்களில் கட்டுமானப்பணிகள் நிறைவடையும் எனக் கூறிய நிலையில் மதுரை தோப்பூரில் ‘எய்ம்ஸ்’க்கு ஒதுக்கிய 224.24 ஏக்கர் இடம் வெறும் பொட்டல்காடாக காட்சி அளிக்கிறது. இதற்கு முழுப் பொறுப்பை ஒன்றிய பாஜக அரசுதான் ஏற்க வேண்டும்.

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 9:

மதுரை மாநகராட்சிக்கு ஒரு நாளைக்கு 371 எம்எல்டி குடிநீர் தேவைப்படுகிறது. தற்போது வைகை அணை மற்றும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டங்களில் இருந்து 192 எம்எல்டி குடிநீர் மட்டுமே பெறப்படுகிறது. மதுரை மாநகராட்சி 72 வார்டுகளிலிருந்து இருந்து 100 வார்டுகளாக அதிகரித்ததோடு, 20 லட்சம் மக்கள் வசிப்பதால் இந்தக் குடிநீர் போதுமானதாக இல்லை. அதனால், மதுரை மாநகராட்சியில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையைப் போக்க அம்ரூத்3 திட்டத்தின் கீழ் ரூ.1,685.76 கோடியில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நேரடியாக மதுரைக்கு குடிநீர் கொண்டு வரப்பட்டு பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 5 பகுதிகளாக இந்த குடிநீர் திட்டப்பணிகள் நடக்கின்றன.

முல்லை பெரியாறு லோயர் கேம்ப் பகுதியில் தடுப்பணை அமைத்து, அணையில் இருந்து அந்த தடுப்பணையில் தண்ணீரை சேமித்து, அதனை அங்கிருந்து பண்ணைப்பட்டி சுத்திகரிப்பு நிலையம் கொண்டு வந்து மக்கள் குடிக்க உகந்த குடிநீராக சுத்திகரித்து பின் மதுரைக்கு கொண்டு வரப்படுகிறது. இதற்காக லோயர் கேம்ப் பகுதியில் இருந்து பண்ணைப்பட்டி வரை 96 கி.மீ., நீளத்திற்கு சுத்திகரிக்கப்படாத குடிநீருக்கான பிரதானக் குழாய் அமைக்கப்பட்டு வருகிறது. பண்ணைப்பட்டியில் இந்த தண்ணீரை சுத்திகரிக்க 125 எம்.எல்.டி. குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பண்ணைப்பட்டியிலிருந்து மதுரை மாநகர் வரை 54 கி.மீ. நீளத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீருக்கான பிரதான குழாய் பதிக்கப்படுகிறது. இந்த தண்ணீரை, மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளில் சேமித்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக 38 பிரமாண்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் மாநகராட்சி பகுதியில் கட்டப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் இந்தக் குடிநீர் திட்டம் தொடங்கும்போது, 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் திட்டத்தை முடித்து, மதுரை மக்களுக்கு குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டது.

பல்வேறு காரணங்களால் இந்தத் திட்டம் தாமதமானது. தற்போது வரை 60 சதவீதம் வரையே பணிகள் நிறைவுப்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

மதுரை மாநகருக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற மதிமுக மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 10:

உலக நாடுகளுக்கு இடையே ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தை எளிமைப்படுத்தும் வகையில்,வரிச்சலுகை வழங்கப்படுகிறது. வரி செலவினங்களை கட்டுப்படுத்தவும், குறைக்கவும், நாடுகளிடையே, வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் போடப்படுகிறது.

இந்தியாவும் வங்க தேச நாட்டுடன் போட்டுள்ள வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தால் தமிழ்நாட்டில் திருப்பூர் பனியன் தொழில் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

இந்தியாவில் இருந்து, பருத்தி இறக்குமதி செய்ய வசதியாக உருவான இந்த ஒப்பந்தம், இன்று உள்நாட்டு சந்தைகளைப் பதம் பார்ப்பதாக, உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகள், நாடு முழுதும் விற்பனைக்கு செல்கின்றன. சில ஆண்டுகளாக, வங்கதேச நிறுவனங்கள், முழுமையான வரி சலுகையில், இந்தியாவுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்கின்றன. உள்நாட்டு சந்தைகளில் கொரோனாவுக்கு பின், வங்கதேசஆடை விற்பனை அதிகரித்துள்ளது.

வரியில்லாத வர்த்தக ஒப்பந்தம் காரணமாக, வங்கதேசத்தில் இருந்து ஆடைகள் இறக்குமதியாவது அதிகரித்துள்ளது. இந்தியாவை காட்டிலும், கிலோவுக்கு, 50 ரூபாய் துணி விலை குறைவு என்பதால், ஆடையை குறைந்த விலைக்கு உள்நாட்டுசந்தையில் விற்கின்றனர். இதனால், பின்னலாடை தொழிலின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

உடனடியாக தமிழ்நாடு அரசு இதில் தலையிட்டு ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி,வங்க தேச ஆடைகள் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்து , திருப்பூர் பனியன் தொழிலை பாதுகாக்க வேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 11:

தமிழகத்தில் கன்னட மொழி பேசுகிறவர்களில் குரும்பர் சமூகத்தினரும் அடங்குவர். தற்போது மிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் குரும்பர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அதேநேரத்தில், குரும்பரில் ஒரு பிரிவினர் குருமன்ஸ் என பழங்குடி பட்டியலிலும் இடம்பெற்றுள்ளனர். தமிழகத்தில் குரும்பா, குரும்பர், குருமன் என அழைக்கப்படும் சமூகத்தினர் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், சேலம் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் வசிக்கின்றனர்.

இவர்கள் அனைவரும் ஒரே சமூகத்தினர் என்பதால் அனைவரையும் குருமன்ஸ் என்ற பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை ஆகும்.

இதனை வலியுறுத்தி மத்திய பழங்குடிகள் நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டாவுக்கு கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கடிதம் ஒன்றை கடந்த 2022, டிசம்பர் மாதம் அனுப்பியுள்ளார். அவர் தமது கடிதத்தில், குரும்பர்கள் ஒரே இனம் என பல்வேறு ஆய்வுகளால் உறுதி செய்யப்பட்டு, முடிவுகளும் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன, அதனடிப்படையில் அரசமைப்பு பிரிவு 342இல் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஒன்றிய பாஜக அரசு குருமன்ஸ் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஆவன செய்ய வேண்டும் என்று இம் மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 12:

இலங்கைப் போரின்போது ஒன்றரை லட்சம் அப்பாவி ஈழத் தமிழர்களை படுகொலை செய்த சிங்கள அரசு, அதற்காக இன்று வரை பொறுப்பு ஏற்கவில்லை.

கடந்த காலங்களில் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வந்த போதும் கூட, சிங்கள அரசு ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனவெறியை கைவிடவில்லை.

இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிரான இனவெறித் தாக்குதல்கள் தொடர்வதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் 2022 பிப்ரவரி மாதம் தனது அறிக்கையில் குற்றம்சாட்டியது.

தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் நிலைமை மோசமடைந்து இருப்பதாக அந்த அறிக்கை கூறியது.

ஈழத் தமிழர்களுக்கு எதிரான அத்துமீறல்களும், கொடுமைகளும் இன்னும் தொடர்கின்றன.

தமிழக மீனவர்களை சிங்களப் படையினர் கைது செய்வதும் தொடர் கதையாகி விட்டது.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக தொடரும் இனவெறி வன்முறைகளுக்கு முடிவு கட்டாமல், பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு ஏற்படாது.

எனவே, இலங்கைக்கு நிபந்தனை இல்லாமல் இந்திய அரசு கடன் வழங்கவோ, ஆதரவளிப்பதோ கூடவே கூடாது.

வடக்கு கிழக்கிலிருந்து ராணுவத்தை வெளியேற்றுதல், போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்தல், ஈழத் தமிழர் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணுதல், மீனவர் சிக்கலுக்குத் தீர்வு உள்ளிட்டவை தொடர்பாக இலங்கையிடம் வாக்குறுதிகளைப் பெற்று அதனடிப்படையில் மட்டும் தான் இலங்கைக்கு இந்தியா உதவ வேண்டும் என்று மதிமுக மாநாடு வலியுறுத்துகிறது.

ஈழத்தமிழர்களின் இறையாண்மையை உறுதி செய்ய தமிழீழம் ஒன்றே தீர்வு என்பதை கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் முதன்முதலில் 2011 ஜூன் 1 ஆம் நாள், பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில் நடந்த மாநாட்டில் முன்வைத்தார். உலகத் தமிழினம் இணைந்து தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு ஒன்றை ஐ.நா. மன்றம் மூலம் நடத்துவதற்கு உறுதி ஏற்க வேண்டும் என இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம்-13

மத்திய கணக்குத் தணிக்கைக் குழு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையின் மூலம் மோடி தலைமையிலான பாஜக அரசின் ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

நாடு முழுவதும் உள்ள சாலைகள் நெடுஞ்சாலைகள் விரைவுச் சாலைகளை இணைக்கும் பாரத்மாலா திட்டத்தின் முதல் கட்டத்தில் 34,800 கிலோ மீட்டர் சாலை அமைக்க, மத்திய அமைச்சரவை 5,35,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. 26,316 கிலோ மீட்டர் சாலை அமைக்க 8,46,588 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அமைச்சரவையின் ஒப்புதல்படி பார்த்தால் ஒரு கிலோ மீட்டர் சாலை அமைக்க15.37 கோடி ரூபாய் செலவாகும் நிலையில், வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, செலவு 32.17 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது, முறைகேடாக இத்திட்டத்தின் நிதி இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

நாட்டின் முதல் எட்டு வழி விரைவு சாலையை சுமார் 9000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்ட திட்டமிடப்பட்டது. ஹரியானாவில் 18.9 கிலோ மீட்டர் தூரத்திற்கும் டெல்லியில் 10.1 கிலோ மீட்டர் தூரத்துக்குமான இத்திட்டத்தில் ஒரு கிலோ மீட்டர் சாலையை அமைக்க 18 கோடி ஆகும் என்று முடிவு செய்திருந்த நிலையில், தற்போது அது ஒரு கிலோ மீட்டருக்கு 250 கோடி ரூபாய் என அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதாவது, 14 மடங்கு மதிப்பீடு உயர்த்தப்பட்டுள்ளது.

ஐந்து சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூல் செய்யப்பட்ட தொகையை ஆய்வு செய்தபோது அவை ரூ.154 கோடி அளவிற்கு அதிக தொகையை வசூல் செய்திருப்பது தெரியவந்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.

2018 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்திய மத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்டம் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி நிலவரப்படி 24.3 கோடி ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு அட்டைகள் உருவாக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் 7.5 லட்சம் மருத்துவக் காப்பீடு அட்டைகள் ஒரே செல்போன் எண்ணைக் கொண்டு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக சிஏஜி அறிக்கை தெரிவிக்கிறது.

தமிழ்நாட்டில் இருந்து வெறும் ஏழே ஆதார் அட்டை எண்களுடன் 4,761 காப்பீடு அட்டைகள் பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. சிகிச்சையின் போது இறந்த 88,670 நபர்களுக்கு புதிதாக சிகிச்சை பார்த்ததாக காப்பீடு பெறப்பட்டிருப்பதாகவும் இதில் பல்லாயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வரும் நிலையில், அயோத்யா மேம்பாடு திட்டத்தில், ஒப்பந்தாரர்களுக்கு பணி கொடுக்கும்போது குறிப்பிட்ட அளவு உத்தரவாதத் தொகையை செலுத்தி இருக்க வேண்டும். 62.17 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் எடுத்த ஒரு ஒப்பந்ததாரர் உத்தரவாத தொகையாக 3.11 கோடி செலுத்த வேண்டிய நிலையில் வெறும் 1.86 கோடி மட்டுமே செலுத்தியுள்ளார்.

ஆனால் அவருக்கு ஒப்பந்தங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் பார்த்தால் ஒப்பந்ததாரர்கள் 19.73 கோடி ரூபாய் அளவிற்கு அதிக லாபம் அடைந்திருப்பதாகவும் இந்த திட்டத்தை செயல்படுத்தியதால் சுமார் 8.22 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் புகார் உள்ளது.

கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் ஓய்வூதிய திட்டத்துக்கான நிதி, விளம்பரத்துக்காக செலவிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 2017 ஆம் ஆண்டு இத்திட்டத்தை 19 மாநிலங்களில் விளம்பரப்படுத்த தலா 5 விளம்பரப்பலகைகள் வைக்க 2.44 கோடி ரூபாய் பணத்தை ஓய்வூதிய திட்டநிதியைக் கொண்டு செலவு செய்யப்பட்டுள்ளது.
ஹெச்ஏஎல் என அழைக்கப்படும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில், தவறான திட்டவடிவமைப்பு கோளாறுகள், உற்பத்தியில் தாமதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 2022 மார்ச் நிலவரப்படி சுமார் 159.23 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக சிஏஜி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய தலைமை தணிக்கை குழு,சிஏஜி
அறிக்கையின் மூலம் ஏழு திட்டங்களில் 7.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஒன்றிய பாஜக அரசு ஊழல் செய்திருப்பது அம்பலமாகி இருக்கிறது.

இதனால்தான் பிரதமர்,உள்துறை அமைச்சர் உள்ளிட்டோர் சனாதனத்திற்கு ஆதரவாக பேசி நாட்டு மக்களை திசை திருப்பி வருகின்றனர்.

2024 இல் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் நாட்டு மக்கள் ,மோடி தலைமையிலான பாஜக அரசை ஆட்சி பீடத்திலிருந்து தூக்கி எறிய எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கி உள்ள இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 14.

பாமாயில் மரம் என்று அழைக்கப்படும் எண்ணெய்ப் பனை என்பது பனை மர குடும்பத்தைச் சார்ந்தது. இந்தோனேசியா, பிலிப்பின்ஸ், மலேசியா முதலிய நாடுகளில் தென்னை மரத்தில் லாபம் இல்லையென்று தென்னையை அழித்துவிட்டு, செம்பனை என்ற குட்டை பாமாயில் மரங்களை வளர்க்கிறார்கள்.

பாமாயில் ஏற்றுமதியில் மலேசியாவும், இறக்குமதியில் இந்தியாவும் முதலிடம் வகிக்கின்றன.

பாமாயில் இறக்குமதியால் தமிழக விவசாயிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். இந்த சமையல் எண்ணெய் மலிவு விலையில் கிடைப்பதால், தேங்காய்விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகி
இருக்கின்றனர். எனவே, இதனைத் தடுக்க பாமாயில் இறக்குமதியைத் தடை செய்ய வேண்டும். அல்லது இந்த எண்ணெய் இறக்குமதிக்கு 300 சதவீதம் வரி விதிக்க வேண்டும்.

நியாயவிலைக் கடைகளில் கொடுக்கும் பாமாயில் எண்ணெயை ரத்து செய்துவிட்டு தேங்காய் எண்ணெய் வழங்க ஆவண செய்ய வேண்டும் என ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசை மதிமுக மாநாடு வலியுறுத்துகிறது.

இந்தியாவை சீர்குலைக்க நினைக்கும் பாஜகவை அகற்றுவது ஒன்றே முற்றுப்புள்ளியாக இருக்கும் என மதிமுக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags: மதிமுக மாநாடுமதுரையில்  மதிமுக மாநாடுவைகோ
ADVERTISEMENT

Related Posts

Indian jets were shot down
அரசியல்

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

அரசியல்

‘இந்தியாவுக்கு பாடம் கற்று கொடுக்க நினைத்தோம்… பிரம்மோஸ் வந்து விழுந்துட்டு!’ – பாக் பிரதமர் கதறல்

அரசியல்

உயிரே போனாலும் கன்னடம் வாழ்க என்று சொல்ல மறுத்தவர் ஜெயலலிதா- நயினார் நாகேந்திரன் சொன்ன பிளாஸ்பேக்

Next Post

தூக்கத்தில் கூட கவனம் வேண்டுமா..? கர்ப்பிணி பெண்களே உஷார்..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.