அரசியல் பாலகன் அண்ணாமலைக்கு நாவில் கொழுப்பு நல்லதல்ல என ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர், தி.மு. இராசேந்திரன் விமர்சித்துள்ளார்.
இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
நடைபயணம் என்கிற பெயரால் ஒரு நாடகக் கூத்தை நடத்திக்கொண்டு இருக்கின்ற அரசியல் பாலகன், தமிழ்நாட்டு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை,
நேற்று முன்தினம் விருதுநகரில் பேசிய வீடியோ ஒளிப்பதிவை சற்று முன் கேட்க நேர்ந்தது..
அதில் கடைசியாக, இப்போதைய விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூருக்கு சீட் கிடைக்கிறது கஷ்டம்… காரணம் வைகோவின் மகன் இந்த தொகுதியில் போட்டியிட முயற்சிக்கிறார் என சொல்லிவிட்டு ரோட்ல போறவங்க வாறவங்க எல்லாம் எம்.பி.க்கு நிற்கிற நிலமை ஆயிருச்சு உங்க தொகுதியில என எகத்தாளமாக பேசிஉள்ளார்!!
இந்தச் செய்தியில் உண்மை இல்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும் …
அண்ணாமலை அவர்களே! நீங்கள் யார்? ரோட்டில் போகும் சாதாரண மனிதரா? அல்லது ஏதாவது ஒரு நாட்டுக்கு மன்னரா?
டீ அடித்தவர் நாட்டின் பிரதமராகவே வரும்போது, ரோட்ல போகிற வருகிறவன் எம்.பி. ஆக கூடாது என்று ஏதேனும் சட்டம் இருக்கிறதா?
“ஏற்பாடு” செய்து பிஜேபி அழைத்து வந்து நிறுத்திய மக்களை பார்த்து பேசினீர்களே… அந்த மக்களே ரோட்ல அன்றாடம் வந்து போகிறவர்கள்
தானே!.. ரோட்ல போகிற வருகிறவனைப் பார்த்தால் உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா போய்விட்டதா?
தெருவில் போகிற வருகிற சாமானியன் செலுத்துகிற வாக்கு தான்,
கோட்டையில் யார் ஆளணும் என்பதை முடிவு செய்கிறது என்பதை மறந்திட வேண்டாம்.. தெருவோரத்து சாதாரண மனிதனின் பிரதிநிதி நான் என்று ஓங்கிக்குரல் எழுப்பியவர் தான் எங்கள் தலைவர் மாமேதை அண்ணா
ஏன் என்று கேட்பதற்கு யாருமில்லையா என்று ஏங்குகிற ஏதுமற்றவர்களுக்காக ஒலிக்கின்ற குரல்தான் எனது குரல் என்று நாடாளுமன்றத்தில் முழங்கியவர் தான்
அண்ணாவின் இலட்சியத் தம்பி என் தலைவர் வைகோ…
மறுமலர்ச்சி திமுகவின் இளந்தலைவர் துரை வைகோ அவர்கள், இயக்கத்தால் பொதுவாழ்விற்கு கொண்டுவரப்பட்டபோது “ஆதாயம் இல்லாத மக்கள் பணி சமரசம் இல்லாத மக்கள் நலன்” என்கிற அடித்தட்டு மக்களுக்கு தொண்டாற்றுவதையே தமது குறிக்கோள் என பிரகடனம் செய்தவர்
ரோட்டில் போகிறவர் – வருகிறவர் என்று நீங்கள் இளக்காரமாக பேசுகிற அந்த சாமானியர்கள் என்கிற சிற்றுளி ஆகப்பெரும் அதிகார மலைகளை பெயர்த்திடும் சக்தி பெற்றது என்பதை வரலாற்றை திரும்பிப்பார்த்து அரசியல் பாலகன்
அண்ணாமலை புரிந்து நடந்து கொள்ள வேண்டும் என்பதை எச்சரிக்கையாகச் சொல்லி வைக்கின்றோம்..
உடலில் கொழுப்பு தவிர்க்க முடியாததாக இருக்கலாம் …. ஆனால் நாவில் கொழுப்பு நல்லதல்ல அண்ணாமலை.. என குறிப்பிட்டுள்ளார்.