மும்பையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற ‘மகாராஷ்டிரா பூஷன் விருது’ வழங்கும் விழாவில் வெயில் தாங்காமல் 13 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
நவி மும்பையின் கார்கர் பகுதியில் மகாராஷ்டிரா அரசாங்கத்தின் கலாச்சாரத் துறை சார்பில் ‘மகாராஷ்டிர பூஷன்’ விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. சாட்டிலைட் டவுன்ஷிப்பில் உள்ள கார்கரில், பிரபல சமூக சேவகர் தத்தாத்ரேய நாராயண் தர்மாதிகாரிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. நவி மும்பையில் உள்ள கார்கரில் உள்ள கார்ப்பரேட் பூங்காவில் நடைபெற்ற விழாவில், பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, முதல்வர் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் ஃபட்னாவிஸ் முன்னிலையில் விருதை வழங்கினார்.
திறந்தவெளி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பலருக்கும் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதில் பலரும் மயக்கமடைந்து விழுந்துள்ளனர். திறந்தவெளி மைதானத்தில் காலை 11.30 மணிக்கு தொடங்கிய பரிசளிப்பு விழா, மதியம் 1 மணி வரை நடந்ததில் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் மயங்கி விழுந்த 24 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கர்கரில் உள்ள மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.