மறைந்த பங்காரு அடிகளார் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி..!! திரண்டு வரும் பக்தர்கள்..!!
மறைந்த பங்காரு அடிகளார் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உடல்நலக்குறைவால் காலமானார்.
உடல்நல குறைவு காரணமாக கோவில் வளாகத்தில் உள்ள வீட்டில் இருந்தபடியே அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், நேற்று மாலை 5 மணி அளவில் பங்காரு அடிகளார் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
அவரது உடல் அடக்கம் அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேல்மருவத்தூர் சென்று, பங்காரு அடிகளாரின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். உடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ஆன்மீகமும், கருணையும் நிறைந்த அவரது வாழ்க்கை என்றென்றும் பலருக்கு வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கும் என்றும் பதிவிட்டுள்ளார்.
மனித குலத்திற்கான தனது அயராத சேவை மற்றும் கல்விக்கு முக்கியத்துவம் அளித்ததன் மூலம் பலரின் வாழ்க்கையில் நம்பிக்கை மற்றும் அறிவு விதைகளை விதைத்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பங்காரு அடிகளார் அவர்களுடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், பங்காரு அடிகளார், விட்டுச் சென்ற இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது என்றும், மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் பீட நிர்வாகிகளுக்கும், பக்தர்களுக்கும், ஆன்மீகவாதிகளுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
உண்மையான சனாதன தர்மத்தை உலகிற்கு உணர்த்தி, வாழ்ந்துகாட்டியவர் பங்காரு அடிகளார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கடவுள் வழிபாட்டில் ஜாதி சமய வேறுபாடுகளை தகர்த்து, கருவறைக்குள் பெண்களை அனுமதித்து, தரிசிக்க, அபிஷேகம் செய்ய வாய்ப்புகளை வழங்கி மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியவர் பங்காரு அடிகளார் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
பங்காரு அடிகளாரின் மகன் அன்பழகனிடம் தொலைபேசி மூலமாக ஆறுதல் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
சமய பீடத்தைச் சமுதாய பீடமாய் மாற்றியவர்; பீடம் கண்டவரின் பீடு புகழ் நீடு நிலவட்டும் என்று கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
பங்காரு அடிகளார் அவரது மரணச் செய்தியை அறிந்து பக்தர்கள் மேல்மருவத்தூரில் தற்போது குவிந்து வருகிறார்கள்.. அவருக்கு பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
பங்காரு அடிகளார் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வரும் பக்தர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது…