மே தினத்தை ஒட்டி தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் என சேலம் மெய்யனூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பாக மே தின கொடியை ஏற்றி வைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மே தின விழா இன்று தமிழகத்தில் தொழிலாளர்கள் மத்தியில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சேலத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மெய்யனூர் கிளை பணிமனை முன்பாக தொமுச சார்பில் நடைபெற்ற மே தின விழா கொண்டாட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, தொமுச கொடியை கொடியை ஏற்றி வைத்து பேசினார்.
அப்போது, மே தினத்தை முன்னிட்டு திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கியது முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் தான் என்றும், 2006 முதல் 2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் 36 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் அமைக்கப்பட்டதும் கருணாநிதி ஆட்சியில்தான்.
விவசாயக் தொழிலாளர்களுக்கு வீடு வழங்கியது, இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழகத்தில் கை ரிக்ஷாவை ஒழித்து கட்டியது, சங்கம் இல்லாமல் செயல்பட்ட தொழிலாளர்களுக்கு நேரடியாக அரசு திட்டங்களை வழங்கியது, தனியார் ஊழியர்களுக்கும் அரசு ஊழியர்களை போல பணிக்கொடை வழங்கிய திட்டம் , தொழிலாளர்களுக்கு விபத்து காப்பீடு, மே தின நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 1990 ஆம் ஆண்டு சென்னை நேப்பியர் பூங்காவிற்கு மே தின பூங்கா என்று பெயர் சூட்டி அங்கு மே தின நினைவுச் சின்னத்தை அமைத்தது என தொழிலாளர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொடுத்தவர் முத்தமிழ் கலைஞர் தொடங்கி வைத்ததாக சுட்டிக்காட்டினார்.
இதில் இன்னும் கூடுதல் சிறப்பு என்னவென்றால் மே தின பூங்கா அமைத்து இருப்பது சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியான என் தொகுதியில் தான். ஆண்டுதோறும்
மே தினவிழாவில் தலைவருடன் சென்று பங்கேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறேன். இந்த ஆண்டு சேலத்தில் உள்ள உங்களுடன் மே தின விழா கொண்டாடுவது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது எனக்கூறினார்.
பெரியார், அண்ணாவை சந்திக்காவிட்டால் நானும் கம்யூனிஸ்ட் ஆக மாறி இருப்பேன் என கலைஞர் அவர்கள் சொல்லுவார்கள். அவர்களின் வழியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொழிலாளர்களுக்கு ஏராளமான நலத்திட்டங்களை செய்து வருகிறார்.
குறிப்பாக கடந்த ஓராண்டில் 18 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களை சேர்ந்த ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 660 தொழிலாளர்களுக்கு, 247 கோடி அளவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளார்.
அண்மையில் ஒரு சட்ட முன் வடிவு கொண்டுவரப்பட்டது. அது குறிப்பிட்ட சில நிபந்தனையுடன், ஒரு சில தொழிற்சாலைக்கு மட்டும் தான் பொருந்தும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனாலும் , அதனை பல்வேறு கோணத்தில் பல்வேறு தரப்பினர் விமர்சித்தனர். அதற்கெல்லாம் மதிப்பு கொடுக்கக்கூடிய வகையிலும் , தொழிற்சங்கங்கள் அதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை அடிப்படையிலும் தொழிலாளர்களுடைய கோரிக்கைக்கு செவி சாய்க்கும் வண்ணம் அந்த சட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என அறிவித்திருந்தார்.
மே தினமான , இன்று காலை , முதலமைச்சர் அவர்கள் , அந்த சட்டத்தை உடனே திரும்ப பெறுகிறோம் என்று அறிவித்திருக்கிறார். எனவே என்றைக்குமே தொழிலாளர் நலனை பேணிக்காக்கும் இயக்கமாக திமுக திகழ்ந்து கொண்டிருக்கிறது.
ஆனால் முந்தைய ஆட்சியாளர்கள் டெஸ்மா, எஸ்மா என்ற சட்டங்களை கொண்டுவந்து தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பினார்கள். ஆனால் தொழிலாளர்களுக்கும் திமுக விற்கும் இடையேயான உறவு என்பதை யாராலும் அளித்திட முடியாத உறவாக உள்ளது.
பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் பொழுது பல்வேறு அணியினர் வரவேற்பு அளிக்கின்றனர். இதில் தொமுச அணியினர் முந்திக்கொண்டு வரவேற்பளிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளதாக பேசினார்.