மயிலாடுதுறையில் நடைபெற்ற இருசக்கர பழுதுபார்ப்போருக்கான விழாவில் தொழிலாளர்நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் பங்கேற்றார்.
இருசக்கர வாகன பழுதுபார்ப்போர் சங்க முப்பெரும்விழாவில் அமைச்சர் கணேசன் கலந்துகொண்டு உரையாற்றினார். திமுக ஆட்சி பொறுப்பேற்றபின் அதிமுக ஆட்சி காலத்தில் நலவாரிய உறுப்பினர்கள் ஒரு லட்சத்து 7 ஆயிரம் பேருக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன; தனி நலவாரிய கோரிக்கை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றப்படும் என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியில் நலவாரிய உறுப்பினர்கள் ஒரு லட்சத்து 7 ஆயிரம் பேருக்கு கல்வி, விபத்து, ஓய்வூதியம் உள்ளிட்ட உதவித்தொகைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவர்களுக்கு திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் கொரோனா ஊரடங்குக்கு பிறகு முதல்முறையாக 50 ஆயிரம் பேருக்கு உதவி தொகைகள் வழங்கப்பட்டன.
அதன் பின்னர் மூன்று மாதத்திற்கு பிறகு எஞ்சிய 57,000 தொழிலாளர்களுக்கு உதவி தொகைகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் இதுவரை சுமார் 10 லட்சம் பேர் புதிய உறுப்பினர்களாக இணைந்துள்ளார்கள். அதேபோல் 18 நல வாரியங்களில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் பணம் வழங்கப்பட்டுள்ளது.
பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆட்டோ ஒன்றுக்கு ஒரு லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது. கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு பத்தாயிரம் தொழிலாளர்களுக்கு ரூ.4 லட்சம் வழங்கிய ஒரே முதல்வராக தமிழ்நாடு முதல்வர் விளங்குகிறார். மேலும் படிப்பு, திருமணம், விபத்து இழப்பீடு தொகை ஆகியவை திமுக ஆட்சியில் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
இருசக்கர வாகன பழுது பார்ப்போர் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பின் கோரிக்கையான தனி நலவாரிய கோரிக்கை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இக்கூட்டத்தில் எம்எல்ஏக்கள் ராஜகுமார், நிவேதா முருகன், பன்னீர்செல்வம் மற்றும் கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
Discussion about this post