ஆட்சியை இழக்கும் ஜெகன்மோகன் ரெட்டி..! ஆந்திரா தேர்தல் நிலவரம்..!
தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. அதில் தெலுங்கு தேசம் கட்சி, பாஜக, ஜனசேனா கூட்டணி, 175 சட்டப்பேரவை தொகுதிகளில் இக்கூட்டணி 154 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
தெலுங்கு தேசம் 130 தொகுதிகளிலும், ஜனசேனா 20 தொகுதிகளிலும், பாஜக 7 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. அதேசமயம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 18 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஆனால் காங்கிரஸ் கூட்டணி பின்னடைவை சந்தித்துள்ளது.
குப்பம் தொகுதியில் 9-வது முறையாக போட்டியிட்டுள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு 9088 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
புலிவேந்துலா தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி 34,964 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பிட்டாபுரம் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் பவன் கல்யாண் 40,693 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
நகரி தொகுதியில் போட்டியிட்ட ஆந்திர அமைச்சரும், நடிகையுமான ரோஜா இம்முறை பின்னடைவை சந்தித்து வருகிறார்.
ரோஜா 10376 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், அவரை எதிர்த்து போட்டியிடும் பானு பிரகாஷ் 18388 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
இதேபோல், ஜெகன் கட்சியினருக்கு பல தொகுதிகளில் பின்னடைவே காணப்படுகிறது.
ஆந்திர மாநிலத்தில் 25 மக்களவை தொகுதிகளில் 16 தொகுதிகளில் தெலுங்கு தேசமும், 4 தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸும், 3 தொகுதிகளில் பாஜகவும், 2 தொகுதிகளில் ஜனசேனாவும் முன்னிலை வகிக்கின்றது.
தெலங்கானாவில் மொத்தம் உள்ள 17 மக்களவை தொகுதிகளில் காங்கிரஸ் – 8 பாஜக – 8 என முன்னிலை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இம்முறை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக அவரது தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரஸுக்கு ஆதரவாக போட்டியிட்டார். இவருக்கு ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கியதோடு, அக்கட்சியின் சார்பில் கடப்பா எம்பி தொகுதியிலும் அவர் போட்டியிட்டுள்ளார். இவர் ஜெகன்மோகன் ரெட்டியை விமர்சித்தது போன்று எதிர்கட்சிகள் கூட விமர்சித்திருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்த பின் ஆந்திராவில் துப்பாக்கி சூடு, கண்ணீர் புகை வீச்சு, தடியடி என சில மாவட்டங்களில் வன்முறை பூமியாக மாறியது.
ஜெகன் கட்சியை சேர்ந்த மாசர்லா, சட்டமன்ற தொகுதி வேட்பாளரான பின்னெலி ராமகிருஷ்ணுடு என்பவர் வாக்குச்சாவடிக்குள் நுழைந்து வாக்கு இயந்திரத்தையே தூக்கி போட்டு உடைத்தார்.
அனந்தபூரில் வரிசையில் நின்று வாக்களித்த வாக்காளர்களை ஒய்.ஆர்.எஸ். கட்சியின் வேட்பாளர் வாக்காளர் ஒருவரை கன்னத்தில் அறைந்தார். அதற்கு வாக்காளரும் திருப்பி அடிக்க அது பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இது போன்ற சம்பவங்கள் இம்முறை அதிகமாக நடைபெற்றது. இதன் காரணமாக திருப்பதி, சித்தூர், அனந்தபூர், உள்ளிட்ட பகுதிகளில் 25 துணை ராணுவப் படை பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
– லோகேஸ்வரி.வெ