சர்வதேச மகளிர் தினம், ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் பெண்களின் சாதனைகளை அங்கீகரிப்பதற்காகக் கொண்டாடப்படுகிறது. அத்துடன் பெண்களுக்கான பாலின சமத்துவத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துகிறது. இந்த ஆண்டு மகளிர் தின ஸ்பெஷலாக உலக அளவில் பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் அமர்ந்து இந்தியாவை தலைநிமிர வைத்த டாப் 5 பெண்களைப் பற்றி பார்க்கலாம்…
லீனா நாயர்:
பிரான்ஸைச் சேர்ந்த உலக புகழ் பெற்ற ஆடையலங்கார நிறுவனமான ஷெனலின் (Chanel) உலகளாவிய தலைமை நிர்வாகியாக (CEO) உள்ளார். சாங்கலியில் உள்ள வால்சந்த் பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் இளங்கலை பட்டமும், ஜாம்ஷெட்பூரில் உள்ள சேவியர் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட் கல்லூரியில் தன்னுடைய எம்.பி.ஏ. பட்டமும் பெற்ற லீனா நாயர், 1992 ஆம் ஆண்டு யூனிலீவரின் இந்திய துணை நிறுவனமான HUL இல் சேர்ந்தார். யூனிலீவர் நிறுவனத்தின் முதல் பெண் மற்றும் இளம் வயது தலைமை மனித வள அதிகாரி என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான லீனா நாயர், 30 ஆண்டுகள் அந்நிறுவனத்தில் பணியாற்றினார். அதன் பின்னர் 2021ம் ஆண்டு ஃபேஷன் ஐகான் ஆன ஷெனல் நிறுவனத்தின் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
கிரண் மஜும்தார் ஷா:
பெங்களூரில் உள்ள பயோகான் என்ற பயோடெக்னாலஜி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் செயல் தலைவர் ஆவார். கோடீஸ்வரர் முதல் தலைமுறை தொழில்முனைவோர், நன்கொடையாளர், இந்தியாவின் பணக்கார பெண்களில் ஒருவர், சோசியல் மீடியா பிரபலம் என பன்முகத்தன்மையாளராக வலம் வரும் கிரண் மஜும்தார் ஷா, இளம் பெண் தொழில்முனைவோருக்கு நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வருகிறார்.
ஃபால்குனி நாயர்:
இந்தியாவின் முதல் பெண் தலைமையிலான யூனிகார்ன் நிறுவனமான நைகாவின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். இன்று இந்தியாவின் பணக்கார பெண்களில் ஒருவரான ஃபால்குனி நாயர், 50 வயதில் தனது சொந்த நிறுவனமான நைகாவை 2 மில்லியன் டாலர்கள் முதலீட்டில் தொடங்கினார். கோடக் மஹிந்திரா கேப்பிட்டலின் நிர்வாக இயக்குநராக இருந்த வேலையை உதறித்தள்ளிவிட்டு, தொழில்முனைவோராக உருவெடுத்த ஃபால்குனி நாயரின் சொத்து மதிப்பு 38,700 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
தேவிகா புல்சந்தனி:
தேவிகா புல்சந்தனி, அமெரிக்காவின் நியூயார்க்-ஐ தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலகளாவிய விளம்பரம் மற்றும் மக்கள் தொடர்பு நிறுவனமான ஓகில்விய் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இதன் மூலமாக விளம்பர ஏஜென்சிக்கு தலைமை தாங்கும் முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் என்ற பெருமையை அடைந்துள்ளார். டேராடூனில் உள்ள வெல்ஹாம் பெண்கள் பள்ளியில் முடித்த தேவிகா, மும்பையில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் ஆங்கிலம் மற்றும் உளவியலில் இளங்கலை பட்டமும், xஅமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்புகளில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
ரேவதி அத்வைதி:
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரேவதி அத்வைதி, அமெரிக்காவில் உள்ள வணிக நிறுவனமான பிளெக்சு-வின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். பிர்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸின் (பிட்ஸ்) முன்னாள் மாணவர் இவர், ஈட்டன் நிறுவனத்தின் கடைத்தள மேற்பார்வையாளராக தனது பணியை ஆரம்பித்து இன்று உலகின் முன்னணி நிறுவனத்தின் சிஇஓவாக உயர்ந்துள்ளார்.
2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் பார்ச்சூன் பத்திரிகை தேர்ந்தெடுத்த மிகவும் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் இவர் பெயரும் இடம்பெற்றுள்ளார்.