பிரசவத்திற்கு சென்ற கர்ப்பிணியின் வயிற்றில்.. மருத்துவர்களின் அலட்ச்சியம்..!
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் பகுதியை சேர்ந்த சந்தீப் என்பவரின் மனைவி நவ்நீத் கவுர். நிறை மாத கர்ப்பிணியான இவர் பிரசவத்திற்காக மீரட்டின் மவானா நகரில் உள்ள ஜேகே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு சுகப்பிரசவம் ஆகாது என்று கூறிய மருத்துவர்கள், அறுவைச் சிகிச்சை செய்யவேண்டும் என கூறினர். உறவினர்கள் சம்மதித்த நிலையில், அறுவை சிகிச்சைக்காக அழைத்து சென்றபோது இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, அவருக்கு இறுதிச் சடங்குகளை நிறைவேற்றி, தகனம் செய்தனர். அதன்பிறகு சாம்பலை சேகரிக்கும்போது, ஒரு அறுவைச் சிகிச்சை கத்தி ஒன்று உறவினர்களின் கைகளில் சிக்கியது. இதைப் பார்த்ததும் குடும்பத்தினர் அதிர்ச்சி உறைந்தனர்.
பெண்ணுக்கு அறுவைச் சிகிச்சை செய்தபோது, அறுவைச் சிகிச்சை கத்தியை அவரது வயிற்றில் விட்டுவிட்டதாகவும், அதன் காரணமாகவே அவர் உயிரிழந்துவிட்டதாகவும் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.
இது தொடர்பாக காவல் நிலையத்தில் சந்தீப் அளித்த புகாரை அடுத்து, மீரட்டின் தலைமை மருத்துவ அதிகாரி ஜேகே மருத்துவமனையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தார்.
மேலும், இதற்கான விசாரணை நடத்தப்படும் என்று கூறி, குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மருத்துவர்களின் அலட்ச்சியத்தால் கர்ப்பினி பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-பவானி கார்த்திக்