சட்டத்திற்கு புறம்பாக பட்டா.. எதிர்ப்பு தெரிவித்த மக்கள்..
திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 13-வது வார்டு புங்கத்தூர் லட்சுமிபுரம் பகுதியில் வசிக்கும் பாளையம் (வயது 89) என்ற மூதாட்டி. இவர் அப்பகுதியில் 29/2A என்ற சர்வே எண் கொண்ட கிராம நத்தம் நில வகைப்பாட்டில் குடிசை வீடு கட்டி தனது மகள் மற்றும் பேரன், பேத்திகளுடன் பூர்விகமாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் தான் வசிக்கும் வீட்டிற்கு 3 சென்ட் இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் இது நாள் வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில் தற்போது மூதாட்டியின் குடிசை வீட்டின் அருகே காலி நிலமாக இருந்த அரசுக்கு சொந்தமான ரூ.7 கோடி மதிப்புள்ள 12,500 சதுர அடி கொண்ட காலி நிலத்தை மட்டுமின்றி மூதாட்டி வசித்து வந்த குடிசை வீட்டின் நிலத்தையும் சேர்த்து ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணராவ்விற்கும், திருவள்ளூர் உள்ள பிரீத்தி மெடிக்கல் உரிமையாளர் அசோக் உள்ளிட்ட இரண்டு நபர்களுக்கு சட்ட விரோதமாக திருவள்ளூர் மாவட்ட வருவாய்த்துறை பட்டா வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
கிராம நத்தம் நிலம் என்பது கிராமத்தில் வீட்டுமனை இல்லாமல் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கும் நிலம் தான் கிராம நத்தம் நிலம் என்பது அரசு விதிமுறை. இந்த விதிமுறைகளுக்கு மாறாக பணக்கார நபர்களுக்கு சட்ட விரோதமாக பட்டா வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து சட்டத்திற்கு புறம்பாக பட்டா வழங்கிய நிலத்தில் சுற்று சுவர் அமைக்கும் பணியில் ஈடுபட்ட போது இதனை அறிந்த மூதாட்டி உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் தடுத்து நிறுத்தி சட்டத்திற்கு புறம்பாக வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்து பட்டா வழங்கி அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பூர்விகமாக குடிசை வீட்டில் வசித்து வரும் மூதாட்டிக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.