முதல் முறையாக கடவுளை பார்த்தேன்..! -ஊரும் உறவும்
எவ்வளவு தான் பணம் சம்பாதித்தாலும் அதை செலவு செய்யும் குணம் அனைவரிடமும் இருக்கும். ஆனால் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவும் குணம் ஒரு சிலரிடம் மட்டும் தான் இருக்கும்.
அப்படி எல்லாம் நாளும் உதவி கொண்டு இருப்பவர்கள் தான் சென்னை ராஜஸ்தான் ராயல் வாலிபர் சங்கம் மற்றும் சென்னை உணவு வங்கி அமைப்பினர்.
சென்னையில் உள்ள புறநகர் பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களில் வளரும் குழந்தைகளுக்கு உணவு அளிப்பது, வருடத்திற்கு ஒருமுறை பொழுது போக்கிற்காக வெளியே அழைத்து செல்வது வழக்கமாக வைத்துள்ளனர்.
அதேப்போல் இந்த வருடம் திருப்பதிக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த பயணத்தில் 160 பார்வையற்றோர் , 100 உடல் ஊனமுற்றோர், 108 வயதானவர்கள், 50 மனவளர்ச்சி குன்றியவர்கள், மேலும் 600 க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் என 1000 பேர் சென்றுள்ளார்கள்.
அதில் பயணம் செய்த ஒரு சிறுமியிடம் பேசிய பொழுது, இதுவரை நாங்கள் யாரும் கோவிலுக்கு சென்று கடவுளை பார்த்தது இல்லை, ஆனால் எங்களின் நிலைமையை கடவுள் பார்த்து இருக்கிறார். எங்களை கோவிலுக்கு அழைத்து வந்தது மட்டுமின்றி, இலவச உணவும் வழங்கினார்கள். எங்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. என்று கூறினார்.
மேலும் நான் வளர்ந்து படித்து முடித்து ஒரு வேலைக்கு சென்று, ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவ வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தேன் என்றும் சொன்னார். அந்த சிறுமியின் கனவு நிறைவேற நாமும் இறைவனை பிராத்திப்போம் .
வெ.லோகேஸ்வரி
Discussion about this post