9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை… வானிலை ஆய்வு மையம் தகவல்..!
தமிழ்நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை திவீர அடைந்தநிலையில், சென்னையில் தற்போது பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னையில் ஏப்ரல், மே மாதங்களில் அவ்வப்போது பெய்து வந்த மழை, ஜூலையில் கொஞ்சம் தீவிரமடைந்தது. ஆனாலும், கடந்த ஒரு வாரமாக சென்னையின் பல பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவாகியுள்ளது.
இதனைதொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி மாலையில் சென்னையின் பல பகுதிகளிலும் மழை பெய்தது. ஆனால், ஆக.5 மற்றும் 6 ஆம் தேதி காலை முதலே வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தது.
இந்த நிலையில், நேற்று மாலை வானம் இருட்டி சிறிது நேரத்தில் மழை வெளுத்து வாங்கத் தொடங்கியது. சென்னையின் பெரம்பூர், புரசைவாக்கம், சேத்துப்பட்டு, அரும்பாக்கம், சூளைமேடு, வடபழனி, கோடம்பாக்கம், மேற்கு மாம்பலம், சைதாப்பேட்டை, அடையார், கோட்டூர்புரம், கிண்டி, தாம்பரம், சேலையூர், செம்மஞ்சேரி, சிட்லபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
இதுதவிர சென்னையின் பிற பகுதிகளிலும் மழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது அதன்படி, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய 9 மாவட்டங்களில், வரும் 8ம் தேதி கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது. அதேபோல், சென்னையிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-பவானி கார்த்திக்