அசைவ உணவகங்களிலும் அரசு பேருந்துகளை நிறுத்தலாம் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் நிறுத்த உணவகத்திற்கான நிபந்தனைகளை நேற்று(மார்ச்.24) போக்குவரத்து துறை வெளியிட்டது. இதில் சைவ உணவு மட்டும் தான் தயார் செய்ய வேண்டும் என்று நிபந்தனை சர்ச்சை ஏற்ப்படுத்திய நிலையில் அந்த வார்த்தை நீக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் அசைவ உணவகங்களில் அரசு பேருந்துகளை நிறுத்தலாம் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நெடுஞ்சாலைகளில் உள்ள அசைவ உணவகங்களிலும் அரசு பேருந்துகளை நிறுத்தலாம் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.முன்னதாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் இயக்கப்படும் பேருந்துகள் தங்களது உணவகத்தில் நிறுத்தம் செய்ய ஒரு வருடத்திற்கு உரிமம் வழங்க ஒப்பந்தப்புள்ளிகள் (இரண்டு உறை முறையில்) அதற்கான படிவத்தில் கோரப்படுகின்றன. ஒப்பந்தப்படிவம் 19/03/2022 முதல் 27/04/2022 வரை பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்திச் செய்யப்பட்ட ஒப்பந்தப்புள்ளி படிவம் 28/04/2022 அன்று மாலை 03.00 மணி வரை பெறப்பட்டு பின்னர் ஒப்பந்ததாரர் முன்னிலையில் 03.30 மணியளவில் திறக்கப்படும். இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யும் ஒப்பந்தப்புள்ளி படிவத்திற்கு ரூபாய் 1,000- க்கான தொகையைக் கேட்பு வரைவோலையாக M.D. S.E.T.C. என்ற பெயரில் எடுத்து ஒப்பந்தப்புள்ளி படிவத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். கேட்பு வரைவோலை இணைக்கப்படாத ஒப்பந்தப்புள்ளி படிவம் நிராகரிக்கப்படும்.