தெற்கு இரயில்வேயில் 3 வழித்தடத்தில் கவாச் தொழில்நுட்பம்…!! கவாச் என்றால் என்ன..?
தெற்கு இரயில்வேயில் குறிப்பிட்ட 3 வழித்தடத்தில் மட்டும் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் தொழில்நுட்பத்தை விரைவில் அமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது..
சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், அரக்கோணம் – ரேணிகுண்டா, சென்னை சென்ட்ரல்- கூடூர் ஆகிய 3 வழித்தடங்களில் முதல் கட்டமாக, கவாச் தொழில்நுட்பத்தை செயல்படுத்த தெற்கு ரயில்வே டெண்டர் வெளியிட்டிருக்கிறது. இவை ரயில் ஓட்டுநர்களுக்கு ரயில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் தொழில் நுட்பம் ஆகும். இது தென் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது.
நாட்டின் மிக முக்கிய அதிவேக ரயில் வழித்தடங்களில் ‘கவாச்’ தொழில்நுட்பத்தை செயல்படுத்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்கள் வரும் போது மற்றும் விபத்து அபாயம் ஏற்படும் சமயங்களில், விபத்தில் சிக்குவதை தடுக்க ‘கவாச்’ தொழில்நுட்பம் உதவும் என்று மத்திய அரசு நம்புகிறது.
கவாச் தொழில்நுட்பம் என்றால் என்ன :
ரயில் இன்ஜின், ரயில் பாதை,சிக்னல் என மூன்றையும் இணைத்து பாதுகாப்பு கவசம் உருவாக்கப்பட்டிருக்கும், அதுதான் கவாச் தொழில்நுட்பம் ஆகும். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பு கவச் ஆகும். 2022-ம் ஆண்டு மார்ச் 23-ஆம் தேதி ரயில்வே அமைச்சகம் இதனை அறிவித்தது.
இது எப்படி வேலை செய்யும் என்றால், ரயில் பாதையின் நடுவில், ஒவ்வொரு 4 கி.மீ. தொலைவில் சிப்க்கள் பொருத்தப்பட்டு இருப்பதால் ரயில் ஓட்டுநர்களுக்கு ரயில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் என்று தெரிவித்தனர்.
எஸ்பிஏடி சிக்னல் பாஸிங் அட் டேஞ்சர் என்று அழைக்கப்படும் இந்த சமிக்ஞையானது, ஒரே தடத்தில் 2 ரயில்கள் வந்தால் எச்சரிக்கும், அதோடு மட்டுமல்லாமல் இது தானாகவே பிரேக் அப்ளை செய்து ரயிலின் வேகத்தை மட்டுப்படுத்தி விபத்துக்கான சாத்தியத்தைக் குறைக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதில் ஒரு கி.மீ. தொலைவுக்கு இந்த தொழில்நுட்பத்தை செயல்படுத்த ரூ.50 லட்சம் வரை செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் முதலாக தென் மத்திய ரயில்வேயின் லிங்கம்பள்ளி-விகாராபாத்-வாடி மற்றும் விகாராபாத்-பிதார் பிரிவுகளில் 250 கிலோமீட்டர் தூரம் வரை கவாச் சோதனை நடத்தப்பட்டிருந்தது.
இந்த சோதனை வெற்றி பெற்றதையடுத்து, இந்திய ரயில்வே நெட்வொர்க் முழுவதிலும் கவச் தொழில் நுட்பத்தை விரிவுபடுத்த முடிவு செய்து செயல்படுத்தி வருகிறது.
மத்திய அரசு, இந்த கவாச் தொழில் நுட்பத்தை தெற்கு ரயில்வேயில் முதல்கட்டமாக 3 வழித்தடங்களில் 271 கி.மீ.தொலைவுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் படிப்படியாக 2,216 கி.மீ. தொலைவுக்கு கவாச் தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வரும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
அரசு அறிவிப்பின் படி, சென்னை – அரக்கோணம் வரை 68 கி.மீ. தொலைவுக்கும்,
அரக்கோணம் – ரேணிகுண்டா வரை 65 கி.மீ. தொலைவுக்கும்,
சென்னை- கூடூர் வரை 138 கி.மீ. தொலைவுக்கும் கவாச் தொழில்நுட்பம் நிறுவப்பட இருக்கிறது.
இதன் படியே சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், அரக்கோணம் – ரேணிகுண்டா, சென்னை சென்ட்ரல் – கூடூர் ஆகிய 3 வழித்தடங்களில் முதல் கட்டமாக, கவாச் தொழில்நுட்பத்தை செயல்படுத்த தெற்கு ரயில்வே சார்பில் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்த சில ஆண்டுகளில் இந்த தொழில்நுட்பம் படிப்படியாக பல பகுதிகளில் அமல்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக
ஜோலார்பேட்டை – சேலம் – ஈரோடு,
விழுப்புரம் – காட்பாடி,
கரூர்- திண்டுக்கல்,
சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு,
மதுரை – கன்னியாகுமரி,
சொரனூர் – சேலம்,
ஈரோடு – கரூர் உள்ளிட்ட வழித்தடங்களில் “கவாச் தொழில்நுட்பம்” கொண்டு வரப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
– கவிப்பிரியா