தமிழகத்தில் முதல் முறையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ ராகி(கேழ்வரகு) இலவசமாக வழங்கும் திட்டம் நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் நாளை தொடக்கபடுவதாக உணவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள ரேசன் குடும்ப அட்டைதாரர்களுக்கு தற்போது வழங்கபட்டு வரும் அரிசி, கோதுமையுடன் ராகியும் சேர்த்து வழங்கபடும் என தமிழக முதலமைச்சர் அறிவித்தார். அதன் படி முதற்கட்டமாக நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் நாளை இத்திட்டம் தொடங்படுகிறது. அதற்காக நீலகிரி மாவட்டத்திற்கு வந்துள்ள தமிழக உணவு துறை செயலளர் ராதாகிருஷ்ணன் உதகையில் உள்ள மாவட்ட வாணிப கழக கிடங்கினை ஆய்வு செய்தார்.
சேமிப்பு கிடங்கில் வைக்கபட்டுள்ள அரிசி, பாசிபயிறு, பாமாயில் மற்றும் ராகி ஆகியவற்றை ஆய்வு செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழக முதல்வர் குடும்ப அட்டைதாரருக்கு ராகி (கேழ்வரகு) வழங்கபடும் என ஏற்கனவே அறிவித்து இருந்த நிலையில் உதகை அருகே உள்ள பாலகொலா மலை கிராமத்தில் நாளை தொடங்கபடும் என்றும் உணவு துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன் மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமசந்திரன் ஆகியோர் கலந்து கொள்வதாகவும் தெரிவித்தார்.
இத்திட்டத்திற்காக 1350 மெட்ரிக் டன் ராகி மத்திய உணவு கழகத்தில் இருந்து ஒதுக்கீடு செய்யபட்டு உள்ளதாகவும், அதில் நீலகிரி மாவட்டத்திற்கு மாதத்திற்கு 400 மெட்ரிக் டன் தேவை ஆனால் தற்போது 482 மெட்ரிக் டன் ராகி இருப்பு வைத்துள்ளதாகவும் இத்திட்டத்தின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் 2 லட்சம் 29 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ ராகி வழங்கபடும் என்றார்.
தமிழகம் முழுவதும் வினியோகம் செய்யும் அளவுக்கு ராகி இல்லாததால் நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் முதல் முறையாக தொடங்கபடுவதாகவும் பின்னர் படி படியாக தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தபடும் என்ற அவர் கூட்டுறவு துறை மூலம் சிறு தானியங்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் வேளாண் துறை உடன் இணைந்து சிறுதானியம் கொள்முதல் நிலையங்கள் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.
Discussion about this post