தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்திய காலை சிற்றுண்டி திட்டத்தால் மாணவர்களின் பள்ளி வருகை அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் கனவுத் திட்டமான காலை உணவுத் திட்டத்தினை கடந்த ஆண்டு பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் நாளன்று மதுரையில் தொடங்கி வைத்தார். இத்திட்டம் தற்போது தமிழ்நாடு முழுவதும் 1,937 பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 1,48,315 மாணவர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்ட 1,543 தொடக்கப் பள்ளிகளில் 1,319 பள்ளிகளில் அதிகரித்துள்ளது. இதில், 624 மாணவர்களின் பள்ளிகளில் 10 வருகை சதவீதமும், 462 பள்ளிகளில் 20 சதவீதமும்,193 பள்ளிகளில் 30 சதவீதமும் என மாணவர் வருகை அதிகரித்துள்ளது.
திருப்பத்தூர், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்ட அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது. ‘பள்ளிக்கல்வியை மேலும் பரவலாக்கவும், கற்றலை இனிமையாக்கவும், எல்லாக் குழந்தைகளும் பசியின்றி கல்வியறிவு பெற்றிடவும் எந்தத் தியாகத்தையும் செய்திடுவோம்’ என்ற முதலமைச்சரின் உன்னத நோக்கத்தை செயல்படுத்திட வேண்டுமென தீர்மானித்துள்ளார்.
அதன்படி வரும் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள 30 ஆயிரத்து 122 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை பயிலும் 18 இலட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இந்த நல்ல நோக்கத்திற்கு வரும் நிதியாண்டில் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.