ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை சீராக உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்தது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், எம்.எல்.ஏவாக பதவியேற்றார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டார்.
நெஞ்சு வலி காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், இவருக்கு இதயவியல் நிபுணர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர் எனவும் தகவல் வெளியானது. இந்நிலையில் ஈவிகேஎஸ் உடல் நிலை சீராக உள்ளதாகவும், அவர் நலமுடன் உள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள தமிழக சுகாதாரத்துறை இன்னும் ஓரிரு நாட்களில் மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார் எனக்கூறியுள்ளது.